அமலாக்கப் பிரிவின் தீவிர நடவடிக்கைகளைத் தடுக்கவே சொத்துகளை விற்ற விஜய்மல்லையா
டெல்லி: தமக்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி தடுக்கவே சொத்துகளை யாருக்கும் தெரியாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா விற்பனை செய்துள்ளதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய வங்கிகளில் ரூ 9,000 கோடி கடனைப் பெற்று விட்டு அதை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார் விஜய் மல்லையா. இதனால் அவரது ரூ1,411 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

அப்போதுதான் கொடகு பகுதியில் உள்ள 2 சொத்துகளை யாருக்கும் தெரியாமல் விஜய் மல்லையா விற்பனை செய்திருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. சொத்துகளை முடக்கும் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில்தான் விஜய் மல்லையா சொத்துகளை விற்பனை செய்திருப்பதாக அமலாக்கத்துறை கருதுகிறது.
இந்த சொத்துகளை விற்பனை செய்தது மூலம் கிடைத்த பணம் மல்லையாவுக்கு சென்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே தற்போது அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என நீதிமன்றம் பிரகடனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மல்லையா மீது அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறுகின்றனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
இந்தியாவில் இருந்த போதே நீதிமன்றங்கள் அனுப்பிய சம்மன்களை ஏற்க மறுத்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார் மல்லையா. பின்னர் இங்கிலாந்துக்கு தப்பிய அவர் தற்போது சொத்துகளை முடக்குவதைத் தடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதனால் இந்த வழக்கு தற்போது வலுவானதாக மாறியுள்ளது. விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
ஆனால் இங்கிலாந்து அரசோ இதற்கு ஒத்துழைக்காமல் மறுத்து வருகிறது. இருதரப்பு சட்டரீதியான உதவி செய்யும் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு அவரை அனுப்பி வைக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்மல்லையா இந்தியா கொண்டுவரப்பட்டால் அவர் மீதான வழக்கு விசாரணை விரைவுபடுத்தப்பட்டுவிடும் என்கின்றன அமலாக்கத்துறை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications