OBC பட்டியலிலிருந்து பல பிரிவுகள் நீக்கம்! உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மமதா பானர்ஜி மேல் முறையீடு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஓபிசி பட்டியலிலிருந்து பல பிரிவுகளை நீக்கி கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளிதிருந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என மமதா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதியிலிருந்து 2012-ம் ஆண்டு மே 11-ம் தேதி வரை யிலான காலகட்டத்தில் 42 பிரிவினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (ஓபிசி) 'சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இட ஒதுக்கீடு சட்டம் 2012'-ன் கீழ் சேர்க்கப்பட்டனர். இதில் இஸ்லாமியர்களும் அடங்கியுள்ளனர்.

அரசின் இந்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 23ம் தேதி நீதிபதி தபப்ரதா சக்ரவர்த்தி மற்றும் ராஜசேகர் மந்தா உள்ளிட்ட இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இட ஒதுக்கீடு சட்டம் 2012-ஐ ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டுமல்லாது இது மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த உத்தரவை மமதா பானர்ஜிதான் பிறப்பித்தார்.
நீதிமன்றம் தனது உத்தரவில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1993-ன் கீழ், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கருத்தும் ஆலோசனையும் மாநில சட்டமன்றத்தைக் கட்டுப்படுத்தும். மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, தேசியஆணையத்துடன் கலந்தாலோசித்து, புதிய வகுப்புகளைச் சேர்ப்பது அல்லது மீதமுள்ள வகுப்பினரை ஓபிசிகளின் மாநிலப் பட்டியலில் சேர்ப்பது குறித்த பரிந்துரைகளுடன் சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மட்டுமல்லாது, 77 பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கு 2010-ம் ஆண்டுக்குப் பிறகு ஓபிசி அந்தஸ்து வழங்கப்பட்டதற்குக் காரணம் அவர்கள் வாக்கு வங்கியாகக் கருதப்பட்டது மட்டுமே என்றும் கூறியுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள் மற்றும் அத்தகைய இடஒதுக்கீட்டின் காரணமாக ஏற்கனவே பணியில் இருப்பவர்களை இந்த உத்தரவு பாதிக்காது என்றும் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என மமதா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். இன்று மேற்கு வங்கத்தில் 8 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவு பின்னடைவாக அமைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications