கொல்கத்தா மருத்துவர் கொலை: வங்கதேசத்தை போல கலவரம்..பாஜக, சிபிஐ(எம்) ப்ளான்! மம்தா பானர்ஜி புகார்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டுகென திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வரான மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தை வைத்து பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வங்கதேசத்தில் நடந்ததை போன்ற போராட்டங்களை நடத்தி தனது
அரசைக் கவிழ்க்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகக் கொடூரமான கொலை செய்யப்பட்டார்.

உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்கள் இன்று விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளி வந்திருக்கும் நிலையில் மாணவியின் உடலில் பல காயங்கள் இருந்ததால் அவர் கொடூரமாக தாக்குதலை எதிர்கொண்டு மரணத்தை சந்தித்திருக்கிறார் எனவும், அவரது உடலில் இருந்து 150 மில்லி கிராம் விந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் நிறைய பேர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கொலையை ஒருவர் மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை எனவும். குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் முறையற்ற உடற்கூறாய்வு செய்யப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் இதனை மேற்கு வங்க காவல்துறையினர் மறுத்திருக்கும் நிலையில் பாஜக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இது தொடர்பாக போராட்டத்தில் குறித்துள்ளன.
மேலும் குற்றவாளிகளை காப்பாற்ற மம்தா பானர்ஜி அரசு முயற்சிப்பதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் மாநில சுகாதாரத்துறை அமைச்சரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மம்தா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் பெண் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசி உள்ளார். மேலும் ""திரிணாமுல் காங்கிரஸ் அரசு மருத்துவ மாணவி கொலை வழக்கில் நடவடிக்கை எடுத்தபோதிலும் குற்றவாளிகளை காப்பாற்றுவதாக பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது , என்னை எவ்வளவு வேண்டுமானாலும் குற்றம் சாட்டுங்கள் ஆனால் மேற்கு வங்காளத்தை குற்றம் சாட்ட வேண்டாம்" என கூறியுள்ளார்.
மேலும்" சிபிஐக்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் வழங்குவோம். அதே நேரத்தில் மருத்துவர்களின் போராட்டத்தால் ஏராளமான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் பாஜகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வங்கதேசத்தில் நடந்ததை போன்ற ஒரு போராட்டத்தை ஏற்படுத்தி மேற்கு வங்கத்தில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கின்றன" என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications