ரூபாய் நோட்டுக்காக மக்கள் அவதி.. ஜனாதிபதியுடன், மம்தா, கேஜ்ரிவால் நாளை சந்திப்பு
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் நாளை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட உள்ளனர்.
நாளை பகல் 1.30 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. காங்கிரசில் யாராவது ஒரு தலைவரும் இதில் பங்கேற்கலாம் என தெரிகிறது. மேற்கு வங்கத்தை சேர்ந்தவரான காங்கிரசின் பிரணாப் முகர்ஜி, மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லாவும், இந்த குழுவில் இணைந்து பிரணாப்பை சந்திக்க உள்ளாராம். பொதுமக்கள் அவதிப்படுவதை தடுப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது என்ற குற்றச்சாட்டை இவர்கள் முன்வைக்க உள்ளனர்.