சும்மா பேசாதீங்க... செஞ்சு காட்டுங்க.. மோடிக்கு பதிலடி கொடுத்த மமதா பானர்ஜி!
பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பவதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மமதா பானர்ஜி, வெறும் வார்த்தைகளால் சொன்னால் போதாது செய்து காட்டுங்கள் எனக்கூறியுள்ளார்.
குஜராத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டார். தொடர்ந்து சபர்மதி ஆஸ்ரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மகாத்மா காந்தி பின்பற்றிய அஹிம்சை வழி குறித்து அங்கு திரண்டவர்களிடம் பேசினார்.
காந்தி உண்மையான அஹிம்சையை பின்பற்றினார் என்று கூறிய மோடி, பக்தி என்ற பெயரில் மனிதர்களை கொல்வதை ஏற்க முடியாது என்றார். இதனை காந்தியும் ஏற்க மாட்டார். மனிதர்கள் கொல்லப்படுவது அஹிம்சை அல்ல என்றும் மோடி கூறினார்.
பசுவின் பெயரால் யாரையும் கொன்றால் அதனை ஏற்க முடியாது என்ற அவர், மகாத்மா காந்தியையும், வினோபாவையும் மிஞ்சிய பசு பாதுகாவலர்கள் யாரும் இல்லை என்றும் அவர் கூறினார்.
வன்முறை எதற்கும் தீர்வாகாது என்ற அவர் சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது என்றார். காந்தி பிறந்த இந்த சமூகத்தில் வன்முறைக்கு இடம் இல்லை என்றும் அவர் கூறினார். காந்தி பிறந்த மண்ணில் பசுவின் பெயரில் வன்முறைகள் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் மோடி தெரிவித்தார்.
மோடியின் இந்த பேச்சுக்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். பசுபாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவிகள் கொல்லப்படுவதை தடுக்க வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது என அவர் கூறியுள்ளார். பசுவுக்காக மனிதர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.