மமதாவின் டெல்லி பொதுக் கூட்டம்- அன்னா ஹசாரே திடீர் புறக்கணிப்பு!!
டெல்லி: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி டெல்லியில் இன்று பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே திடீரென பங்கேற்கவில்லை.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் மமதா பானர்ஜி. அன்னா ஹசாரே பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் தமது தேசிய அளவிலான தேர்தல் வியூகத்தை மமதா பானர்ஜி வெளியிடக் கூடும் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீரென அன்னா ஹசாரேவின் உதவியாளர் சுனிதா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இந்த பொதுக்கூட்டத்தில் ஹசாரே பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய மமதா பானர்ஜி. நான் எனக்காக எதுவும் கேட்டு உங்கள் முன்னால் நிற்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை விரட்ட வேண்டும். பா.ஜ.க.ஆட்சி அமைப்பதைத் தடுக்க வேண்டும்.
கூட்டணி அரசின் மூலம் நாட்டை பலப்படுத்துங்கள் என்ற கோரிக்கையுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன். நான் எனக்காக மட்டும் அதிகாரம் கேட்கவில்லை. நாட்டு மக்கள் அனைவருக்குமான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று தான் கூறி வருகிறேன்.
ஒருவர் உண்மையை பேசினால் அவருக்கு பல எதிரிகள் உருவாகி விடுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்று பேசினார்.
எங்க கூட்டமில்லை..
மேலும், ஹசாரே கலந்து கொள்ளாததைப் பற்றிக் குறிப்பிடும் போது, திரிணாமுல் காங்கிரஸ் கூட்டமில்லை இது. அன்னா ஹசாரே கூட்டம்தான். மேற்கு வங்கத்தில் எனது வேலையை விட்டு விட்டு நான் இங்கு வந்தேன். நான் விரும்பிருந்தால் ரயில் நிறைய மக்கள் வந்திருப்பார்கள் என்றார் மம்தா.