முஸ்லிம் மதகுருக்கள் எதிர்ப்பு- பெண்கள் கால்பந்து போட்டியை தடுத்து நிறுத்திய திரிணாமுல் நிர்வாகிகள்!
மால்டா: மேற்கு வங்கத்தில் முஸ்லிம் மதகுருக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பெண்கள் கால்பந்து போட்டியை நடத்த விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் தடுத்து நிறுத்திய சம்பவத்தால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
மேற்கு வங்கத்தின் மால்டாவில் மார்ச் 14-ந் தேதியன்று பெண்கள் கால்பந்து போட்டி நடைபெற இருந்தது. இப்போட்டியில் இந்திய பெண்கள் கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்த வீராங்கனைகளும் அர்ஜூனா விருது பெற்றவர்களும் பங்கேற்க இருந்தனர்.

கால்பந்து போட்டிகளில் பெண்களையும் பங்கேற்க செய்யும் வகையில் மால்டாவின் உள்ளூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் முஸ்லிம் மவுலவிகளும் உள்ளூர் கிராம மக்களும் ஒன்றாக திரண்டு வந்து போட்டியை நிறுத்துங்கள்.. இது பெண்களிடத்தில் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்று வாதிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் போட்டியாளர்களோ, பெண்கள் கால்பந்து போட்டிகளில் கலந்து கொள்வதால் என்ன தப்பு என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இத்தனைக்கும் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்தவரும் கூட முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரெசா என்பவர்தான்.. இருப்பினும் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசாரும் முஸ்லிம் மதகுருக்களுக்கு ஆதரவாக நின்று கால்பந்து போட்டியை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து உள்ளூர் நிர்வாகமும் இப்போட்டியை வேறுவழியின்றி நிறுத்துமாறு உத்தரவிட்டது. பெண்கள் கால்பந்து போட்டியை இப்படி திரிணாமுல் காங்கிரசார் தடுத்து நிறுத்தியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications