"ரூ.25 கோடி கேட்டார்கள்.. நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்.." பெகாசஸ் பற்றி மம்தா முக்கிய கருத்து
கொல்கத்தா: பெகாசஸ் விவகாரம் சில மாதங்களுக்கு முன்னர் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த ஸ்பைவேர் சாப்ட்வேர் தான் பெகாசஸ். இதன் மூலம் ஒருவரது செல்போனை ஒட்டுமொத்தமாக கண்காணிக்க முடியும்.
இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு இஸ்ரேல் விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. பயங்கரவாதிகளைக் கண்டறிய மட்டுமே இந்த மென்பொருளைப் பயன்படுத்தப்படுவதாக இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது.

பெகாசஸ்
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த பெகாசஸ் விவகாரம் வெளியாகி மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் பெகாசஸ் மூலம் கண்காணிக்கப்பட்டதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த விவகாரம் அப்போது மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது.

மம்தா பானர்ஜி
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "அவர்கள் அந்த மென்பொருளை (பெகாசஸ் ஸ்பைவேர்) விற்க எங்கள் போலீசாரிடம் வந்தனர். இதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர், எங்களிடம் ரூ 25 கோடி கேட்டனர். அப்போது இந்த விவகாரம் என்னிடம் வந்தது. இதுபோன்ற மென்பொருள்களை நாங்கள் வாங்க விரும்பவில்லை என அப்போதே நான் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டேன்" என அவர் தெரிவித்தார்.

மறுத்துவிட்டேன்
இஸ்ரேலிய ஸ்பைவேரான பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி, அரசு நட்டு மக்களைக் கண்காணித்தாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், மம்தா பானர்ஜியின் இந்தக் கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மம்தா மேலும் அவர் கூறுகையில், "தேச விரோத செயல்களைத் தடுக்கவும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இதைப் பயன்படுத்தி இருந்தால், அது வேறு விஷயமாக இருந்திருக்கும். ஆனால் அங்கு அது அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் மீது இது பயன்படுத்தப்படுகிறது, இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் பெகாசஸ்
கடந்த ஆண்டு 300-க்கு மேற்பட்ட இந்தியர்களின் மொபைல்கள் அரசு பெகாசஸ் மென்பொருளை வைத்து கண்காணித்ததாகத் தகவல் வெளியானது. காங்கிரஸின் ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், மத்திய அமைச்சர்கள் (அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் பிரஹலாத் படேல்) ஆகியோரின் மொபைல்கள் கண்காணிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு நடத்தப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.












Click it and Unblock the Notifications