இதனால என்ன யூஸ்? மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை.. மமதா பானர்ஜி அதிரடி!
கொல்கத்தா: மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டம் வரும் ஜூன் 15ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. நிதி ஆயோக் குழுவின் தலைவரான பிரதமர் மோடி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக்கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், நிதியமைச்சர்கள், தலைமைச்செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில் பங்கேற்கும் முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் மாநிலத்திற்கு தேவையான நிதித்தேவை குறித்து இந்தக் கூட்டத்தில் பேசுவார்கள்.

பிரதமருக்கு கடிதம்
இந்நிலையில் மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மாநில திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க எந்தவித அதிகாரமும் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது பலனற்றது என அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விமர்சகர்கள் கருத்து
நிதி ஆயோக் கூட்டத்தை மம்தா புறக்கணிப்பதால் மாநிலத்தின் தேவைகளையும் தேவையான நிதியையும் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஃபனி புயலின் போது பிரதமரின் உதவிகளை மமதா பானர்ஜி ஏற்க மறுத்ததாக தகவல் வெளியானது.

வார்த்தை போர்
இதைத்தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் கடுமையான வார்த்தைப் போர் நிலவியது. இதில் இருக்கட்சியினரும் மாறி மாறி அனலைக் கக்கிக்கொண்டனர்.

திரிணாமுல் கட்சியினர் விலகல்
இந்நிலையில் பாஜக இமாலய வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சியை தக்க வைத்தது. இதைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் உட்பட கவுன்சிலர்கள் பலரும் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications