"ஆபரேஷன் சிந்தூர் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் பிரதமர் மோடி.." ஆவேசமான மம்தா.. கடும் தாக்கு!
கொல்கத்தா: பிரதமர் மோடி மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் தேட முயல்வதாகச் சாடியுள்ள மம்தா, இதன் மூலம் நாட்டில் உள்ள எல்லா பெண்களையும் அவமதிப்பதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், தன்னுடன் நேரடியாக டிவி விவாதத்திற்கு வர முடியுமா என்றும் பிரதமர் மோடிக்குச் சவால் விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்த அவர், ஆபரேஷன் சிந்தூர் மூலம் அரசியல் லாபம் பெற முடி முயல்வதாகவும் அதை ஒரு தேர்தல் பிரச்சார கருவியாகப் பயன்படுத்துவதாகவும் சாடியுள்ளார்.

பஹல்காம் தீவிரவாதிகள்
மேலும், பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற தீவிரவாதிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, "பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதிகளை ஏன் இன்னும் பிடிக்கவில்லை? அமெரிக்கா ஏதாவது சொன்னால் நொடியில் அமைதியாகிவிடுகிறீர்களே.. (இந்தியா பாகிஸ்தான் போரை நான் சொல்லியே நிறுத்தின என டிரம்ப் கூறுவதை மம்தா குறிப்பிடுகிறார்). எங்களுக்கு எல்லாம் தெரியும். விளம்பரத்திற்காகவோ அல்லது பிம்பத்தை ஏற்படுத்தவோ மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது.
அரசியல் ஆதாயம்
தேர்தல் பிரச்சாரத்திற்கான நேரம் இதுவல்ல.. அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவே மத்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரை வைத்துள்ளது. இப்போது எதிர்க்கட்சிகள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைப்பதில் தீவிரமாக உள்ளன. நாங்கள் தேசிய நலனுக்காக இதைச் செய்கிறோம். ஆனால், இந்த நேரத்தில் பிரதமர் அரசியல் ஆதாயம் பெற முயல்கிறார்.. தேர்தல் பிரச்சாரத்திற்கான நேரம் இதுவல்ல. அவர் செய்வது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக இருக்கிறது.
பெண்களுக்கு அவமானம்
சிந்தூரை பிரதமர் மோடி விற்று வருகிறார். இது எல்லா பெண்களுக்கும் அவமானம். அவர் இருக்கும்போதே, ஆப்ரேஷன் சிந்தூரை போல அடுத்து ஆபரேஷன் வங்கம் இருக்கும் என பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறோம். மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடக்கும். ஆனால், அவர்களுக்குத் தைரியம் இருந்தால் இப்போதே தேர்தலை வைக்கச் செல்லுங்கள். நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
மோடி சரமாரியாகப் பொய்களைச் சொல்கிறார். சிந்தூர் என்பது இந்த நாட்டின் பெண்களின் மரியாதை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களை அவமதிக்காதீர்கள். இது மோடிக்கு பொருத்தமற்றது" என்றார்.
நிதி ஆயோக் குறித்து விளக்கம்
சமீபத்தில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மம்தா, "கடந்த முறை நான் அங்குச் சென்றேன். ஆனால், நான்கு நிமிடங்களுக்கு மேல் என்னைப் பேச அனுமதிக்கவில்லை. மற்ற முதல்வர்களுக்கு 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால், எனக்கு மட்டும் அனுமதி இல்லை. பேச அனுமதி இல்லாதபோது நான் எதற்கு அங்கே செல்ல வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பிரதமர் மோடி உடன் நேருக்கு நேர் விவாதம் நடத்தவும் அவர் சவால் விடுத்தார். அவர், "நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன். நீங்கள் டிவி விவாதம் ஒன்றுக்கு வாங்க... நான் உங்களுக்குப் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன். மாநிலத்தில் எழுந்த அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications