உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி.. சிபிஐக்கு எதிராக நடத்திய தர்ணாவை கைவிட்டார் மமதா பானர்ஜி
Recommended Video

கொல்கத்தா: சிபிஐ தொடர்ந்த வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியான நிலையில் தர்ணா போராட்டத்தை கைவிட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வந்தனர். எனினும் அவர் கைது செய்யப்படவில்லை. மாறாக சிபிஐ அதிகாரிகள் 15 பேரை கொல்கத்தா போலீஸார் கைது செய்தனர்.

மாநில அரசின் அனுமதி இல்லாமல் கமிஷனரை கைது செய்ய சிபிஐ வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்கு கொல்கத்தா கமிஷனர் ஒத்துழைப்பு தர வேண்டும் என உத்தரவிட கோரும் வழக்கில் சிபிஐ முன் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும் ராஜீவ் குமாரை கைது செய்யக் கூடாது என சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து மம்தா கூறுகையில் இது தார்மீக வெற்றி. சுப்ரீம் கோர்ட் ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வரும் 8-ஆம் தேதி வரை தர்ணா தொடரும் என மம்தா கூறியிருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்பால் தர்ணா போராட்டத்தை கைவிடுவதா வேண்டாமா என்பது குறித்து இன்று தன்னை சந்திக்க வந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்தினார் மமதா. அதில், போராட்டத்தை கைவிட முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து மாலை 6.15 மணியளவில், தான் போராட்டத்தை கைவிடுவதாக மமதா அறிவித்தார். நீதிமன்றங்கள் எங்களுக்கு சாதகமான உத்தரவை தந்துள்ளதால் போராட்டத்தை கைவிடுகிறேன் என்று மமதா அப்போது அறிவித்தார். இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் நிலவிய பதற்ற சூழ்நிலை முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications