மமதா பானர்ஜியின் அடுத்த டார்கெட் திரிபுரா.. 2023 சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்த இப்போதே வியூகம்!
அகர்தலா: திரிபுராவில் காங்கிரஸ் கட்சியை அப்படியே கபளீகரம் செய்து ஆட்சியையே பிடித்த பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க), இப்போது திரிணாமுல் காங்கிரஸின் விஸ்வரூபத்தால் ஆடிப் போய் நிற்கிறது. இதனால் திரிபுரா முதல்வர் பிப்லப் தேவையும் மாற்றி கட்சியிலும் சீரமைப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள பாஜக ஆலோசித்து வருகிறதாம்.
திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் என இருதுருவ நிலைதான் இருந்தது. காங்கிரஸ் கட்சியை அப்படியே வளைத்துப் போட்டு அத்தனை காங்கிரஸ் கட்சியினருக்கும் சீட்டும் கொடுத்து 2018 தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றது பாஜக.
6 போலீசார் மரணத்துக்கு பழி-நெடுஞ்சாலையை மறித்த அஸ்ஸாம்-பொருட்கள், மருந்துகள் இல்லாமல் மிசோரமில் அவதி
காங்கிரஸ் கட்சி இருந்த இடத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் வந்தது. திரிபுராவில் வங்க மொழி பேசுவோர் கணிசமான அளவில் இருப்பதால் மேற்கு வங்க அரசியலின் தாக்கம் திரிபுராவிலும் எதிரொலிக்கத் தொடங்கிய
பாஜகவுக்கு கிலி
அதுவும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 3-வது முறையாக வென்று ஆட்சியை தக்க வைத்த பின்னர் திரிபுரா அரசியல் அனலடிக்கத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் 7 மூத்த தலைவர்கள் கூண்டோடு திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவினர். இது பாஜகவுக்கு ரொம்பவே கிலியை ஏற்படுத்திவிட்டது.
ஐபேக் டீமுக்கு சிறை
இந்நிலையில் 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தொடர்பாக சர்வே நடத்துவதற்கு பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் டீமை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி திரிபுராவுக்கு அனுப்பியது. ஆனால் கொரோனா விதிமுறைகளை மீறியதாக கூறி ஐபேக் டீமை அப்படியே கைது செய்தது பாஜக அரசு. மமதா பானர்ஜிதான் சும்மா இருப்பாரா? திரிபுராவுக்கு அமைச்சர்கள் டீமை அனுப்பி வைத்து ஆட்டம் காண்பித்தார். பின்னர் ஐபேக் டீம் ஜாமீனில் விடுதலையாகினர்.
திரிபுராவில் அபிஷேக்
இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி இன்று திரிபுரா சென்றுள்ளார். இதற்காக அகர்தலாவில் பிரமாண்ட பேனர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வைத்திருந்தது. இந்த பேனர்களை கிழித்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் தமது பாதுகாப்பு வாகனத்தையும் பாஜகவினர் தாக்கியதாகவும் அபிஷேக் பானர்ஜி குற்றம்சாட்டி இருக்கிறார். பாஜக இப்படி அலறுவதன் மூலமாகவே திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸின் விஸ்வரூபத்தை புரிந்து கொள்ள முடியும் என்கிறார் அகர்தாலாவை சேர்ந்த பத்திரிகையாளர்.
கில்லாடி கிஷோர் பர்மன்
இதனால்தான் இப்போது திரிபுராவில் களையெடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் ஆலோசனையில் இருக்கிறதாம் பாஜக. ஏற்கனவே முதல்வர் பிப்லாப் தேவுக்கு எதிராக டெல்லிக்கே சென்று பாஜக எம்.எல்.ஏக்கள் புகார் கொடுத்தனர். அத்துடன் சில எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்தே வேறு வழியே இல்லாமல் டெல்லி மேலிடம் திரிபுரா பக்கம் கவனத்தை திருப்ப தொடங்கி உள்ளது. இதன் முதல் கட்டமாக வடக்கு மேற்கு வங்க பாஜகவின் அமைப்பு செயலாளரான கிஷோர் பர்மன் இப்போது திரிபுராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் மாநில பாஜக பொதுச்செயலாளராக்கப்பட்டுள்ளார். திரிபுராவில் இருந்துதான் அவரை வடக்கு மேற்கு வங்கத்துக்கு இறக்குமதி செய்திருந்தது பாஜக. இந்த கிஷோர் பார்மன்தான் கடந்த ஆண்டு முதல்வர் பிப்லப் தேவுக்கு எதிராக டெல்லிக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் போய் ஜேபி நட்டாவிடம் புகார் தெரிவித்தவர். அத்துடன் மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு திரிணாமுல் காங்கிரஸுக்கு திரும்பிய முகுல் ராயுடன் சேர்ந்து திரிபுரா பாஜக அரசை கவிழ்க்கவும் முயற்சித்தவர் பர்மன்.
யார் அடுத்த முதல்வர்?
இப்போதைக்கு திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் மாற்றப்பட்டால் துணை முதல்வரான திரிபுரா ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஜிஷ்னு தேப் பர்மனுக்கு முதல்வராக அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த ரேஸில் மாநில பாஜக தலைவர் மாணிக் சகா மற்றும் சுதிப் பர்மன் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.
பாஜகவுக்கு எதிரான அலை
திரிபுரா நிலவரம் தொடர்பாக அரசியல் பார்வையாளர் சேகர் தத்தா கூறுகையில், திரிபுராவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. முதல்வர் பிப்லத் தேவ் ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகள், ஐபேக் டீம் உறுப்பினர்களும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் பாஜகவுக்கு கடும் நெருக்கடிதான் திரிபுராவில் காத்திருக்கிறது என்கிறார்.