மம்தாவின் பிடிவாதம் - மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுகிறது இன்போசிஸ்
கொல்கத்தா: தங்களது நிறுவனம் அமையும் பகுதியை சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக கூறி விட்டதால் நிலத்தை அரசிடம் ஒப்படைத்து விட்டு மேற்கு வங்கத்தை விட்டே விலகி விட இன்போசிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுதொடர்பான செய்தியை ஆனந்தபஜார் பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஜனவரி 5ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக இன்போசிஸ் நிறுவன மூத்த துணைத் தலைவர் ராமதாஸ் காமத் மமதாவை நேரில் சந்தித்துப் பேசினார்.
மேற்கு வங்கத்தில் இன்போசிஸ் நிறுவனத்தை அமைக்கவுள்ளதாகவும், அந்த இடத்தை சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்குமாறும் அப்போது மம்தாவிடம் கோரிக்கை வைத்தார் காமத்.
ஆனால் அதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம் மம்தா. மேலும் இதுதொடர்பாக மேலும் பேச தான் விரும்பவில்லை என்றும் முகத்தில் அடித்தாற் போல காமத்திடம் கூறி விட்டாராம் மம்தா. இதனால் அதிருப்தி அடைந்துள்ள இன்போசிஸ் நிறுவன் தான் வாங்கிய நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு மேற்கு வங்கத்திற்கு கும்பிடு போட முடிவு செய்துள்ளதாம்.
கொல்கத்தாவில் தனது நிறுவனத்தை அமைக்க முன்னதாக திட்டமிட்டிருந்தது இன்போசிஸ். பிரமாண்டமானதாக அமைக்க திட்டமிட்ட இந்த அலுவலக வளாகத்தை சிறப்புப் பொருளாதார மண்டலாக அறிவிக்குமாறு அது மேற்கு வங்க அரைசக் கோரி வந்தது.
ஆனால் அதை அரசு மறுத்து விட்டது. இதையடுத்தே முதல்வரை நேரில் பார்த்துப் பேசினார் காமத். அவரோ இனிமேல் இதுகுறித்துப் பேச தான் தயாராக இல்லை என்று கூறி விட்டார்.
மேற்கு வங்கத்தில் தனது வளாகத்தை அமைக்க கடந்த 2005 மற்றும் 2006 இல் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி விருப்பம் தெரிவித்திருந்தார். அரசிடம் 100 ஏக்கர் நிலத்தையும் இ்ன்போசிஸ் கோரியிருந்தது. ஆனால் 2010ம் ஆண்டு முதல் அதற்கு சிக்கல் வந்தது.
அந்த ஆண்டு, இன்போசிஸ் நிறுவனம் 50 ஏக்கர் நிலத்தை, 75 கோடிக்கு வாங்கியது. இருப்பினும் மம்தா முதல்வரான பின்னர் இன்போசிஸ் நிறுவனம் பெரும் சிக்கல்களைச் சந்திக்க ஆரம்பித்தது. இதையடுத்து தற்போது நிலத்தை திருப்பிக் கொடுத்து விட்டு இடத்தைக் காலி செய்யும் முடிவுக்கு இன்போசிஸ் வந்துள்ளது.
ஏற்கனவே இப்படித்தான் டாடா நிறுவனம் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்து மேற்கு வங்கத்திலிருந்து தனது நானோ ஆலையை மூடியது என்பது நினைவிருக்கலாம்.