கேரளாவில் ஓடும் ரயிலில் தமிழக இளைஞர் தீக்குளித்து தற்கொலை முயற்சி.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மும்பை புறப்பட்ட ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மும்பை செல்லும் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வழக்கம் போல புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இதனிடையே ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜினுக்கு பின்னால் உள்ள பொது பெட்டி ஒன்றில் பயணம் செய்த ஒரு வாலிபர் கழிவறைக்குள் சென்று தனது உடையில் தீவைத்து கொண்டார்.
கழிவறையில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்ட மற்ற பயணிகள் பதற்றத்துடன் கதவை உடைத்தனர். கழிப்பறையில் இருந்த நபரை வெளியே இழுத்து அவர் மீது இருந்த தீயை அணைத்தனர். அப்போது அந்த ரயில் காயம்குளம் ரயில் நிலையத்துக்கு வந்த நிலையில், ரயில்வே ஊழியர்கள் அந்த பெட்டியை மற்ற பெட்டிகளில் இருந்து தனியாக கழற்றி தீ பரவாமல் தடுத்தனர்.
மேலும், பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு புகைந்து கொண்டிருந்த தீயை அணைத்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால், ரயிலில் பயணம் செய்த கேரளா காங்கிரஸ் தலைவர் ராஜ்மோகன் உன்னிதன் உள்பட பயணிகள் அனைவரும் விபத்தில் இருந்து தப்பினர்.
தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அந்த இளைஞர் நவாஸ் (24) என்பதும் அவர், வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. உடலில் பலத்த தீக்காயம் அடைந்த நவாஸை போலீஸார் ஆலப்புழை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயில் சில மணி நேரம் தாமமாக கிளம்பியது.