குஜராத்தில் ஆசையோடு வாங்கிய ராசியான காரை 4 லட்சம் செலவு செய்து அடக்கம் செய்த உரிமையாளர்
அஹமதாபாத்: தான் ஆசையோடு வாங்கிய ராசியான காரை விற்க மனம் இல்லாத அதன் உரிமையாளர், அந்த காரை சுமார் 4 லட்சம் செலவு செய்து நல்லடக்கம் செய்துள்ளார். 15 அடி பள்ளம் தோண்டி காரை புதைத்து அதில் மரக்கன்று நட்டுள்ளார். அந்த நிகழ்வில் சுமார் 1500 பேர் வரை கலந்து கொண்டனர். இதனிடையே பழைய காருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய செய்தியை அறிந்து பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகிறார்கள்.
நமது ஊரில் சிலர் வயதான அப்பா அம்மாவையே நன்றாக பார்த்துக் கொள்ளாமலும், அவர்களுக்கு இறுதி சடங்குகளை கூட சரி வர செய்யாமலும் இருக்கிறார்கள். அண்மையில் கூட ஒரு செய்தியை பார்க்க நேர்ந்தது. அதுவும் தமிழகத்தில் தான். பெற்ற தந்தையை அடக்கம் செய்ய மகள்கள் வரவில்லை.. யாருமே இல்லாத அனாதை போல் அவர் இருந்ததை குறித்து கேள்விப்பட்டு கலெக்டர் அதில் தலையிட்டார். கலெக்டர் எச்சரித்த பின்னரே மகள் வந்து தனது தந்தையை அடக்கம் செய்தார்.

இப்படியான நிகழ்வுகள் இந்தியாவில் பல இடங்களில் நடக்கிறது. அதேநேரம் பெற்றோரை அடக்கம் செய்வதற்கு கூட யோசிக்கும் இந்த உலகில் தான், ஒரு சிலர், செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால், தனது உறவையே பறிகொடுத்தது போல் இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்வார்கள். இதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். ஆனால் உயிரற்ற காரை சில லட்சங்கள் செலவு செய்து, உறவினர்கள், நண்பர்களை அழைத்து அடக்கம் செய்த வினோதமான நிகழ்வு குஜராத் மாநிலத்தில நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பதர்ஷிங்கா கிராமத்தின் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் போலாரா என்பவர், சூரத்தில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் போலாரா என்பவர் தனது சொந்த பயன்பாட்டுக்காக சொகுசு கார் ஒன்றை வாங்கியருக்கிறார். அந்த காரை அவர் தனது ராசியான காராகாவும், அதிர்ஷடமாகவும் கருதினார். இதனால் அவர் தனது காரை, குடும்பத்தில் ஒருவர் போல் பாவித்து கவனித்து வந்தார்.
நீண்டகாலம் ஓடியதால் காரில் அவ்வப்போது பழுது ஏற்பட தொடங்கியது. இதனால் வேறு காரை அவர் வாங்கினார். இருப்பினும் அந்த காரை விற்க சஞ்சய் போலாரா மனமில்லாமல் இருந்தார். இதனால் அதை தனக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்துவிட முடிவெடுத்தார். இறுதி சடங்கிற்கான தேதியையும் குறித்தார். இதுபற்றி தனது உறவினர்கள், நண்பர்களுக்கும் தகவல் கொடுத்தார். உறவினர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். எனினும் அவரது முடிவினை எதிர்க்கவில்லை.. அதேநேரம் வினோதமான அந்த நிகழ்வை காண வருகை தரவும் முடிவு செய்தனர்.
વ્હાલસોઈ નસીબદાર કારની સમાધિ !!!
— Kamit Solanki (@KamitSolanki) November 8, 2024
અમરેલીમાં પરિવાર માટે લકી કારને વેચવાને બદલે ઘામધૂમથી જમણવાર યોજી સમાધિ અપાઈ, કારના સમાધિ સ્થળે વૃક્ષારોપણ કરાશે #Gujarat #Amreli pic.twitter.com/1c4hiogs7n
இதனிடையே சஞ்சய் போலாரா, தனது வீட்டு முன்பு இருந்த ஷெட்டில் நின்ற அந்த பழைய காரை மலர் மாலைகளால் அலங்கரித்து, சற்று தொலைவில் உள்ள அவரது தோட்டத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றார். கிட்டத்தட்ட ஒரு மனிதனின் இறுதி ஊர்வலம்போல் அந்த நிகழ்வு நடந்தது. இந்த இறுதி சடங்கில் சுமார் 1500 பேர் ஊர்வலமாக வந்தார். காரை அடக்கம் செய்வதற்காக தோட்டத்தின் ஒரு பகுதியில் 15 அடி ஆழத்தில் குழி ஒன்று தோண்டப்பட்டு இருந்தது. அந்த இடத்துக்கு ஊர்வலம் வந்ததும், காருக்கு பூசாரிகள் மந்திரங்களை ஓதினார்கள். பின்னர் சஞ்சய் போலாரா மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த கார் மீது ரோஜா இதழ்களை தூவினார்கள். இதையடுத்து கார், குழிக்குள் இறக்கப்பட்டு, மண்ணால் மூடப்பட்டது. இந்த நிகழ்வில் அனைவருக்கும் விருந்தும் வழங்கப்பட்டது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக சஞ்சய் போலாரா ரூ.4 லட்சம் வரை செலவு செய்தார்.
தனது காரை அடக்கம் செய்தது குறித்து சஞ்சய் போலாரா கூறுகையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த காரை வாங்கியிருந்தேன். இது குடும்பத்திற்கும் எனக்கும் அதிர்ஷ்டத்தை கொடுத்தது. ராசியான இந்த காரால் தொழிலில் எனக்கு வெற்றியும், எனது குடும்பத்திற்கு மரியாதையும் கிடைத்தது. எனவே, அதை விற்பதற்கு பதிலாக எனது தோட்டத்தில் அடக்கம் செய்துவிட்டேன். எனது சந்ததியினர் இந்த காரைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக, கார் சமாதியில் மரம் ஒன்றையும் நட்டிருக்கிறேன்" இவ்வாறு கூறினார். கார் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வு தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications