ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்ததால் கோபம்... புதுமனைவியை அடித்துக் கொன்ற கணவர்
புனே: ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வெளியே சென்றதால், கோபமடைந்த கணவர் புது மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் புனேயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே அருகே கல்தேக்கடியில் உள்ள மீனாத்தாய் தாக்கரே பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் நிஷாத். இவர் கோண்ட்வாவில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை செய்கிறார். சமீபத்தில் இவருக்கு பூஜா(21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை பூஜா, ஜீன்ஸ் டீ-சர்ட் அணிந்து வெளியே சென்றுள்ளார். இது ரஞ்சித்திற்கு பிடிக்கவில்லை. வீடு திரும்பிய பூஜாவை அவர் கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபத்தில் பூஜாவை தாக்கியுள்ளார் ரஞ்சித். இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக பூஜா உயிரிழந்தார். பயந்து போன ரஞ்சித் போலீசிற்குப் பயந்து வீட்டை வெளிப்பக்கம் பூட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து பூஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள ஸ்வர்கேட் போலீசார், தலைமறைவாக உள்ள ரஞ்சித்தைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications