ஆந்திர வயல்வெளியில் ஆண் பிணம்! - புதையலுக்காக கொலையா?
சித்தூர்: ஆந்திராவில் புதையல் எடுப்பதாகக் கூறி ஆண் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் தவனம்பள்ளி மண்டலம் திகுவபோதனபள்ளி கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தில் ஆண் பிணம் கிடப்பதாக தவனம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் வட்டிவாதிபள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளியான தாயப்பா என தெரிய வந்தது.
இது தொடர்பாக தவனம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயப்பா இறந்து கிடந்த இடத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக யாரோ மின்வேலி போட்டு இருப்பது தெரிய வந்தது.
புதையல் எடுக்க சென்றவர், வன விலங்குகளுக்காக போடப்பட்ட மின் வேலியில் சிக்கி இறந்தாரா என தெரியவில்லை.
மேலும் புதையல் எடுப்பதாக கூறி அழைத்து சென்ற சங்கர் உள்பட 3 பேரும் சேர்ந்து தாயப்பாவை அடித்து கொலை செய்து பிணத்தை வயலில் வீசி சென்றார்களா என்றும் தெரியவில்லை.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் சங்கர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.