வறுமையின் கொடுமை... தந்தையே தன் 2 குழந்தைகளை கொன்ற கொடூரம் !
பெங்களூரு: பெங்களூருவில் பள்ளி கட்டணத்தை செலுத்த முடியாத விரக்தியில் தந்தையே இரண்டு குழந்தைகளைக் கொன்று சாக்கடையில் வீசியுள்ளார். இது தொடர்பாக குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கே.பி.அக்ரஹாரா பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி சிவக்குமார் (37) தாயம்மா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். பவன்குமார் (9), சின்சேனா (6) ஆகிய இருவரும் அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4 மற்றும் 2- ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குழந்தைகளை காணவில்லை. இதையடுத்து குழந்தைகளின் தாயார் தாயம்மா மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் சிவக்குமார் மட்டும் எவ்வித வருத்தமும், கவலையும் இல்லாமல் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உறவினர்களுக்கு சிவக்குமார் மீது சந்தேகம் எழுந்தது. மேலும் அருகிலுள்ள சாக்கடை கால்வாய்க்கு சிவக்குமார் அடிக்கடி சென்று பார்த்து வந்ததும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக உறவினர்கள் மிரட்டி கேட்ட போது, பள்ளி கட்டணத்தை கட்ட முடியாததால் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்து சாக்கடையில் வீசியதாக சிவக்குமார் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதனிடையே அந்த பகுதியில் உள்ள சாக்கடையில் நேற்று முன்தினம் சாக்கு பை ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 5 மணி நேரத்திற்கும் மேல் போராடி இரண்டு குழந்தைகளின் சடலங்களை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக குழந்தைகளின் சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பெற்ற குழந்தைகளை வறுமையின் கொடுமையால் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications