வரதட்சணைக் கொடுமையின் உச்சமாக மனைவியின் பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கணவர்: ம.பி.யில் கொடூரம்
போபால்: மத்தியப்பிரதேசத்தில் வரதட்சணைப் பிரச்சினைக் காரணமாக தனது மனைவியின் பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் கைது செய்யப் பட்டுள்ளனர்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள குனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கல்யாண் ஆகிர்வர். கடந்த எட்டாண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு முதல் தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணைப் பெற்று வரும் படி வற்புறுத்தியுள்ளார் கல்யாண்.
கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரின் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள இயலாத கல்யாணின் மனைவி இது தொடர்பாக போலீசின் உதவியை நாடியுள்ளார். பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே இப்பிரச்சினைத் தீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இனிமேல் வரதட்சணை கேட்டு வற்புறுத்த மாட்டோம் என்ற கணவரின் உறுதி மொழியுடன் மீண்டும் புகுந்த வீட்டிற்கு வாழச் சென்றுள்ளார் அப்பெண். ஆனால், மீண்டும் வரதட்சணைக் கொடுமைகள் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை டிராக்டரின் பேட்டரியில் இருக்கும் ஆசிட்டை எடுத்து மனைவியின் பிறப்புறுப்பு பகுதியில் ஊற்றியுள்ளார் கல்யாண். மேலும், மண்ணெண்ணெய்யை குடிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
இதில் அடிவயிறு, பிறப்புறுப்பு மற்றும் தொடைப் பகுதியில் பலத்த காயமடைந்தார் அப்பெண். உடனடியாக அவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டின் ஓர் அறையில் அடைத்து வைத்துள்ளனர். பின்னர் மயங்கிய நிலையில் கிடந்த மனைவியை இறந்து விட்டதாகத் தவறாகக் கருதிய கணவர்,அப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
பெற்றோர் வந்தபோது, அதிர்ஷ்டவசமாக அப்பெண்ணிற்கு சுயநினைவு வந்துள்ளது. கணவர் செய்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் அவர் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு, மருமகன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது போலீசில் புக்கார் அளித்தனர்.
புகாரின் பேரில் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரைக் கைது செய்துள்ளனர்.
வரதட்சணைக் கொடுமையின் உச்சகட்டமாக மனைவியின் பிறப்புறுப்பில் கொடுரக் கணவரே ஆசிட் ஊற்றிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.