குடிபோதையில் 15 வயது மகளை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை
ஹைதராபாத்: தெலுங்கானாவில் குடிபோதையில் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமல். பழங்குடியினத்தைச் சேர்ந்த அவரின் 15 வயது மகள் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை காலை சிறுமி உடலில் காயங்களுடன் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கமல் போலீசில் புகார் அளித்தார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 21ம் தேதி இரவு நானும் என் மகளும் பைக்கில் சென்று கொண்டிருந்தோம். பார்வாட் கிராமம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு தண்ணீர் குடிக்கையில் ஆட்டோவில் வந்த சிலர் என்னை அடித்துவிட்டு என் மகளை கடத்திச் சென்றுவிட்டனர். எனக்கு மயக்கம் தெளிந்தபோது அங்கு என் மகள் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
போலீஸ் விசாரணையில் கமல் குடிபோதையில் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு நாடகமாடியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் கமல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.