நாய் காலைப் பிடித்து தலைகீழாக சுற்றி தூக்கி வீசிய கொடுமைக்கார இளைஞர்... கைது
டெல்லி: டெல்லியில் 21 வயது இளைஞர் ஒருவர் நாயை அடித்துத் துன்புறுத்துவதை வீடியோவாக எடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.
அந்த நபரின் பெயர் ராகுல் குமார். 21 வயதாகும் அவர் விவேக் விகார் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவைப் போட்டிருந்தார். அதில் ஒரு தெரு நாயைப் பார்த்து அதை முதலில் அருகே போய் அதைத் தட்டிக் கொடுத்து கட்டித் தழுவுகிறார். பின்னர் அந்த நாயை சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறார். அதை அடிப்பதோடு, ஒரு காலைப் பிடித்துத் தூக்கி சுற்றுகிறார். பின்னர் படு வேகமாக அந்த நாயை தூக்கி ஒரு கார் மீது வீசுகிறார். அந்த நாய் வீறிட்டுக் கத்துகிறது பரிதாபமாக.
இந்தக் கொடுமைக்கார காட்சியை வீடியோவில் படமாக்கி அதைப் போட்டிருந்த இந்த நபருக்கு பேஸ்புக்கில் கடும் கண்டனங்கள் எழுந்தன. வழக்கறிஞரும், எழுத்தாளருமான செஷாத் பூனாவாலா இந்த நபருக்கு எதிராக பேஸ்புக்கில் பிரசாரமே தொடங்கினார். மேலும் டெல்லி போலீஸ் கமிஷனருக்கும் இதுதொடர்பாக புகார்கள் போயின.
இந்த நிலையில் என்ஜிஓ நிறுவனமான சம்வாத், அந்த நபர் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது. அப்போது அவரது பேஸ்புக் பெயர் தர் ஜி என்று தெரிய வந்தது. மேலும் இந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து தனது புரபலை அழித்து விட்டார் அந்த நபர்.
இருப்பினும் போலீஸார் அந்த நபர் பெயர் ராகுல் குமார் என்பதையும், ஜந்தா காலனியில் அவர் வசித்து வருவதையும் கண்டுபிடித்து கைது செய்தனர்.