மாற்றுத்திறனாளியை நிர்வாணப்படுத்தி விசாரணை: மீண்டும் சர்ச்சையில் டெல்லி விமான நிலைய அதிகாரிகள்
டெல்லி: சோதனை என்ற பெயரில் மாற்றுத்திறனாளியான ஆடிட்டர் ஒருவரை நிர்வாணப்படுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர் டெல்லி விமான நிலைய அதிகாரிகள்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்து ஒன்றில் தனது காலை இழந்தவர் ராஜேஷ் பாட்டியா என்ற ஆடிட்டர். தனது செயற்கைக் காலுடன் இதுவரை பலமுறை விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ள ராஜேஷுக்கு, சமீபத்திய டெல்லி விமானப் பயணம் மிகவும் கசப்பானதாக அமைந்து விட்டது. அதற்குக் காரணம் டெல்லி விமான நிலைய சோதனை அதிகாரிகள்.
டெல்லி விமான நிலையத்தில் மாற்றுத் திறனாளி என்றும் கூட பார்க்காமல் நிர்வாணப்படுத்தி செக்யூரிட்டி செக் செய்துள்ளனர் அதிகாரிகள். ராஜேஷ் பாட்டியாவின் உடைகளை அகற்றி உட்கார வைத்து விட்டு அவரது செயற்கை காலை எப்படி ஸ்கேன் செய்வது என்று பாதுகாப்பு அதிகாரிகள் பேசிக்கொண்டிருந்தனராம்.
சில மாதங்களுக்கு முன்னர் மாற்றுத் திறனாளி பெண் ஒருவரின் செயற்கைக் காலை கழற்றி சோதனை செய்த போதே, டெல்லி விமான நிலைய அதிகாரிகள் கண்டனத்திற்கு ஆளானார்கள்.
பின்னர், இது குறித்து மாற்றுத் திறனாளிகள் உரிமை சங்கத்தினர் பலரிடம் பேச்சு வார்த்தை நடத்திய விமான நிலைய அதிகாரிகள், ‘இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்' என உறுதிமொழி அளித்தனர்.
ஆனால், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபடுவது வேதனை தருவதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications