உண்ணாவிரதம்.. இரோம் ஷர்மிளாவை மீண்டும் கைது செய்தது மணிப்பூர் போலீசார்!
இம்பால்: ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மீண்டும் உண்ணாவிரதம் இருந்ததால் மனித உரிமைப் போராளி இரோம் ஷர்மிளாவை மணிப்பூர் போலீசார் இன்று கைது செய்தனர்.
மணிப்பூரில் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரத்தை வழங்கும் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டத்தினால் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.
இதனைக் கண்டித்து கடந்த 2000ஆம் ஆண்டு முதல் மனித உரிமைப் போராளி இரோம் ஷர்மிளா காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் அவரை கைது செய்த போலீசார் மூக்கு வழியாக திரவ உணவை செலுத்தினர்.
இரோம் ஷர்மிளா மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு போட்டு மருத்துவமனையிலேயே சிறை வைக்கப்பட்டார். இந்த வழக்கில் இரோம் ஷர்மிளாவை கடந்த புதன்கிழமையன்று மணிப்பூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த நிலையில் மீண்டும் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் குதித்தார் இரோம் ஷர்மிளா. அத்துடன் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாகவும் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இரோம் ஷர்மிளா போராட்டம் நடத்திய இடத்துக்கு சென்ற போலீசார் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி கைது செய்தனர். ஆனாலும் தமது உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் அறிவித்துள்ளார்.