மணிப்பூர் முதற்கட்ட தேர்தலில் 78.03% வாக்குகள் பதிவு.. பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஒருவர் பலி
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இன்று 5 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 38 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி உள்ளது. கடந்த 2017 தேர்தலைப் போல இதிலும் மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், அடுத்து வரும் மார்ச் 5ஆம் தேதி 2ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு நிறைவு
அதேநேரம் அங்கு பொதுமக்களின் மனநிலை அரசுக்கு எதிராக உள்ளதாகவும் இதனால் மக்களைக் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறுகிறது. இவை தவிர நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் இந்த முறை பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அங்கு இன்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

வாக்குப்பதிவு விகிதம்
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 5 மாவட்டங்களில் 38 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி வரை 78.03% வாக்குகள் பதிவாகி உள்ளன. காங்போக்பியில் அதிகபட்சமாக 82.97% வாக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து இம்பாலில் 82.19% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு 86% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்பு
இந்நிலையில் மணிப்பூரில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் எதிர்பாராத விதமாகத் துப்பாக்கி வெடித்ததில் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள திபைமுக் சட்டமன்றத் தொகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த நௌரெம் இபோச்சௌபா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்து உயிரிழந்த அந்த காவலரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக இம்பால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது

தேர்தல் அதிகாரி
இது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் அகர்வால் கூறுகையில், "மணிப்பூரில் 38 தொகுதிகளுக்கு முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மணிப்பூர் காவலர் ஒருவரது சர்வீஸ் ரைஃபிள் எதிர்பாராத விதமாகத் தவறுதலாக வெடித்துச் சிதறியது. இதில் அவர் உயிரிழந்தார். மாநிலத்தில் இன்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications