மணிப்பூர்: எதிர்ப்புகளுக்கு இடையே நாளை சட்டசபை கூட்டம்:10 குக்கி எம்எல்ஏக்கள் கூண்டோடு புறக்கணிப்பு!
இம்பால்: மணிப்பூரில் வன்முறைகள் தொடரும் நிலையில் ஆளும் பாஜக கூட்டணி அரசு நாளை சட்டசபை சிறப்பு கூட்டத்தைக் கூட்டியுள்ளது. மணிப்பூர் பழங்குடிகள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள், கண் துடைப்புக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு கூட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மணிப்பூரில் கடந்த 4 மாதங்களாக குக்கி- மைத்தேயி மக்கள் இடையே மோதல்கள் தொடருகின்றன. இம்மோதல்கள் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 50,000 பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இம்மோதலில் தமிழர்களும் பாதிக்கப்பட்டனர்.

மணிப்பூர் வன்முறையை மாநிலத்தில் , மத்தியில் ஆளும் பாஜக அரசுகள் கட்டுப்படுத்தவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இதற்காகவே நாடாளுமன்றத்தை முடக்கின எதிர்க்கட்சிகள். அத்துடன் மணிப்பூர் பிரச்சனையை பிரதமர் பேச வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.
இந்நிலையில் மணிப்பூர் சட்டசபையில் ஒருநாள் சிறப்பு கூட்டம் நாளை கூட்டப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறைகள் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் இது கண் துடைப்பு நாடகம்; இது மக்களை ஏமாற்றும் செயல் என மணிப்பூர் பழங்குடி அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும் நாளைய சட்டசபை சிறப்புக் கூட்டத்தை கூண்டோடு புறக்கணிப்போம் என 10 குக்கி இன எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர். ஆளும் அரசில் இடம்பெற்றுள்ள குக்கி இன அமைச்சர் ஒருவர், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க விடுப்பு கோரியும் இருக்கிறார்.
பெரும் எதிர்ப்புக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே நாளை இம்பாலில் மணிப்பூர் சட்டசபை கூட்டப்பட்ட நிலையிலும் வன்முறைகள் தொடருகின்றன. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications