மே 3-ந் தேதி ஆரம்பிச்சது... ஜூன் 20 வரை மணிப்பூரில் இண்டர்நெட் சேவை துண்டிப்பு நீடிப்பு!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மே 3-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வரும் இணையசேவைகள் துண்டிப்பானது ஜூன் 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிட்டையேயான மோதல் இப்போது இரு இனங்களுக்கு இடையேயான ஆயுத மோதலாக திசைமாறியுள்ளது. இரு இனக்குழுவினரும் ஆயுதங்கள் ஏந்தி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

மணிப்பூரில் குக்கி, மைத்தேயி இனக் குழுவினரிடையேயான இம்மோதலில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; 500 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பு இனக்குழுவினரும் வன்முறைக்கு அஞ்சி காடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இம்மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூரிலேயே முகாமிட்டு பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின்னர்தான் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பும் ஆயுதங்களை கையில் எடுத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். புதியதாக நேற்று முன் தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். குக்கி இனத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவரது வீடும் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் இணையசேவையானது ஒன்றரை மாதஙக்ளாக துண்டிக்கப்பட்டுள்ளது. இத்தடையானது ஜூன் 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் அனைத்து பொருளியல் சார் நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை வெளி உலகம் அதிகம் அறியாமல் இருந்து வருகிறது என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications