மணிப்பூர்: புதிய போர்க்களமான 'தமிழர்' வாழும் மோரே நகரம் - அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை தளபதி நேரில் ஆய்வு!
இம்பால்: மணிப்பூரில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் மியான்மர் எல்லையில் உள்ள 'மோரே' நகரம் தற்போது ஆயுத குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான புதிய யுத்த களமாக உருமாற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை தளபதி லெப்.ஜெனரல் பிசி நாயர் நேற்று மோரே நகரத்துக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.
மணிப்பூரில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக மைத்தேயி- குக்கி பழங்குடி மக்கள் இடையே கடும் மோதல் நிகழ்ந்து வருகிறது. மணிப்பூரில் ஆளும் மாநில பாஜக அரசு இம்மோதல்களை தடுக்கவே இல்லை என்கிற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. மணிப்பூர் வன்முறைகளில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த மோதல்கள் கட்டுப்படுத்தப்படாத நிலையில் குக்கி- மைத்தேயி இன மக்கள் ஆயுதங்களை கையில் எடுத்துள்ளனர். இருதரப்பும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மணிப்பூரில் மியான்மர் எல்லையில் உள்ள மோரே நகரம். இங்கு தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழ்கின்றனர். மோரே நகரில் குக்கி தரப்புக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த டிசம்பர் 23-ந் தேதி முதல் மோதல் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மோரே நகரில் இருந்து 200க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் மீது குக்கி ஆயுத குழுவினர் தொடர் தாக்குதல் நடத்துவதால் மோரே நகரம் போர்க்களமாக உருமாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையின் தளபதி லெப்.ஜெனரல் பிசி நாயர் நேற்று மோரே நகருக்கு சென்று பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்தார். மோரே நகரில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பிரதிநிதிகளை பிசி நாயர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிசி நாயர், எல்லை நகரமான மோரேவில் பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற தயாராக உள்ளது. பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை செயல்படுத்துவோம். மோரே நகரில் அமைதியை திரும்ப கொண்டு வர அனைத்து தரப்பும் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.












Click it and Unblock the Notifications