ஒபாமா, புதின் உள்ளிட்ட தலைவர்களுக்கு மன்மோகன் சிங் எழுதிய ‘ஃபேர்வெல் லெட்டர்’
டெல்லி: தனக்கு மீண்டும் பிரதமர் ஆகும் எண்ணமில்லை என வெளிப்படையாக தெரிவித்து விட்ட பிரதமர் மன்மோகன் சிங், மத்தியில் புதிய ஆட்சி அமைய இருப்பதையொட்டி பிற நாட்டுத் தலைவர்களுக்கு விடை பெறல் கடிதம் எழுதியுள்ளார்.
16வது லோக்சபா தேர்தலின் கடைசிக் கட்டத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 16ம் தேதி வாக்கு எண்ணும் பணி நாடெங்கிலும் ஒரே கட்டமாக நடக்கிறது. எனவே அதற்கடுத்த சில தினங்களில் மத்தியில் புதிய ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரிய வந்துவிடும்.
இந்நிலையில், தற்போதைய பிரதமரான மன்மோகன் சிங் தனது பதவிக்காலம் முடிவடைவதையடுத்து தன்னுடன் நட்பாக இருந்த பிற நாட்டுத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘தாம் பிரதமராக இருந்த காலத்தில் தனக்கு ஒத்துழைப்பு அளித்ததற்காக நன்றி தெரிவித்துள்ள மன்மோகன், தான் அந்த தலைவர்களுடன் இணைந்து பணி புரிந்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.
பிரதமர் இந்த விடை பெறல் கடிதத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின், ஜெர்மனி பிரதமர், சீன முன்னாள் பிரதமர் உள்ளிட்டோருக்கு எழுதி அனுப்பியுள்ளார்.