அழைக்காமலேயே பாக். போன மோடியா தேசியம் பற்றி பிரசங்கம் செய்வது? மன்மோகன்சிங் கடும் தாக்கு
தீவிரவாத தாக்குதல்களை நடத்திய பின்னர் தம்மை அழைக்காமலேயே பாகிஸ்தானுக்குப் போனவர்தான் பிரதமர் மோடி என சாடியுள்ளார் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்.
டெல்லி: தம்மை அழைக்காத பாகிஸ்தானுக்கு வலிய போன பிரதமர் மோடியா தேசியம் பற்றி காங்கிரஸ் கட்சிக்கு பிரசங்கம் செய்வது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உச்சகட்டமாக காங்கிரஸையும் பாகிஸ்தானையும் இணைத்து பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது:
உதம்பூரிலும் குருதாஸ்பூரிலும் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரும் கூட பாகிஸ்தான் தம்மை அழைக்காத போதும் வலிந்து போனவர்தான் பிரதமர் மோடி. பதான்கோட் ராணுவ முகாமில் தீவிரவாதிகளை ஊடுருவ அனுமதித்தவர் பிரதமர் மோடி.
மோடி ஒன்றும் காங்கிரஸுக்கு தேசியம் பற்றி பிரசங்கம் செய்யத் தேவையில்லை. குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க பாகிஸ்தான் சதி செய்வதாக மோடி பேசிவருவது கடும் கண்டனத்துக்குரியது.
குஜராத்தில் தோல்விஅடைந்துவிடுவோம் என்பது மோடிக்கு தெரியும். இந்த தோல்விபயத்தில்தான் பிரதமர் மோடி உளறி வருகிறார்.
இப்படியான பேச்சுகளுக்காக நாட்டு மக்களிடத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.