பாதுகாப்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மனோகர் பாரிக்கர்.. நாளை கோவா முதல்வராகிறார்
கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில் அவர் வகித்து வரும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
டெல்லி: கோவா மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்போற்க உள்ள மனோகர் பாரிக்கர் தற்போது வகித்து வரும் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
கோவா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றுள்ளன. இதனால் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. 40 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கோவாவில் ஆட்சி அமைக்க 22 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.
கோவாவில் ஆட்சியை அமைக்க பாஜகவும், காங்கிரஸும் கடுமையாக போராடின. பின்னர் உதிரிக் கட்சிகளான கோவா முன்னணிக் கட்சி, எம்ஜிபி ஆகிய கட்சிகளின் ஆதரவு கடிதத்தை அந்த மாநில ஆளுநரிடம் பாஜக வழங்கியது.
இதைத் தொடர்ந்து பாஜகவை ஆட்சி அமைக்க கோரினார் ஆளுநர். எனினும், பாஜக பொறுப்பேற்கும் அடுத்த 15 நாள்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கோவா பாஜக எம்எல்ஏ-க்கள் கோரிக்கையின்பேரில் அந்த மாநில முதல்வராக பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள மனோகர் பாரிக்கர் பதவியேற்க உள்ளார்.
நாளை பொறுப்பேற்க உள்ளதால் தன் வசம் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை அவர் இன்று ராஜினாமா செய்தார்.