மத்திய அமைச்சராவதற்காக கோவா முதல்வர் பதவியை உதறித் தள்ளும் பாரிகர்!
பனாஜி: பிரதமர் மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும்போது தன்னை பாதுகாப்பு துறை அமைச்சராக ஆக்கலாம் என்று எதிர்பார்ப்பில் கோவா முதல்வர் மனோகர் பாரிகர் தனது பதவியை நாளை ராஜினாமா செய்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை வரும் ஞாயிற்றுக்கிழமை விரிவுபடுத்துகிறார். அப்போது பாதுகாப்புத் துறையை கோவா முதல்வராக உள்ள மனோகர் பாரிகருக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாரிகர் தனது முதல்வர் பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளார்.
இது குறித்து அவர் பனாஜியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாஜக தலைவர் அமித் ஷா வியாழக்கிழமை காலை என்னுடன் பேசினார். மத்திய அரசில் பணி அளித்தால் அதை ஏற்க நான் தயாராக இருக்க வேண்டும் என்றார். எனக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக அழைப்பு வரவில்லை. ஆனால் வரும் 9ம் தேதிக்கு முன்பு அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
பாஜக நாடாளுமன்ற கூட்டம் நாளை டெல்லியில் நடப்பதால் இது பற்றி மீடியாவுக்கு நாளையே விவரம் தெரிய வரலாம். மத்திய அமைச்சரவையில் சேர எனக்கு தடையில்லா சான்றிதழை கட்சி அளித்துள்ளது என்றார்.