சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வெறித்தனமான தாக்குதல்- பாதுகாப்புப் படையினர் 17 பேர் பலி
சுக்மா: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 17 பாதுகாப்பு படையினர் பலியாகி உள்ளனர்.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள சுக்மா பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். பாதுகாப்புப் படையினர் கோப்ரா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

சுக்மாவின் கோரஜ்குடா மலைப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் முன்னேறிச் சென்ற போது மாவோயிஸ்டுகள் மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றது.
இந்த மோதல் பல மணிநேரம் நீடித்தது. இதில் பாதுகாப்புப் படையினர் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் 17 பாதுகாப்புப் படையினரை காணவில்லை என்றும் செய்திகள் கூறின.
இதனையடுத்து காணாமல் போன பாதுகாப்புப் படையினரை மீட்பதற்காக நூற்றுக்கணக்கான வீரர்கள் மீண்டும் வனப்பகுதிக்குள் தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டனர். இந்த நிலையில் 17 பாதுகாப்புப் படையினர், மாவோயிஸ்டுகளுடனான மோதலில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களது சடலங்கள் வனப்பகுதிகளில் மீட்கப்பட்டுள்ளன.
2017-ம் ஆண்டுக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கை இது. மேலும் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த ஆயுதங்களையும் மாவோயிஸ்டுகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications