28 மாவோயிஸ்டுகளை பிடித்து சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து சுட்டுக் கொன்றது ஆந்திரா போலீஸ்?
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மாவோயிஸ்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
திருப்பதி: வனப்பகுதியில் பிடிபட்ட மாவோயிஸ்டுகளை கைது செய்து அவர்களுக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து பின்னர் ஆந்திரா போலீசார் சுட்டுப் படுகொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிஷா எல்லையில் அண்மையில் 28 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆந்திரா போலீசார் அறிவித்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஆந்திராவில் கொத்தாக மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள அனைத்து முன்னணி பத்திரிகைகளுக்கும் மாவோயிஸ்டுகள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் மாவோயிஸ்டுகள் யாரும் மோதலில் சுட்டுக் கொல்லப்படவில்லை; அவர்கள் கைது செய்யப்பட்டவர்கள். கைது செய்தவர்களுக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து பின்னர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
ஆந்திரா போலீசாரின் இந்த அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம். செம்மரக் கடத்தல்காரர்கள் என்ற போர்வையில் அப்பாவிகளை சுட்டுப் படுகொலை செய்துவருகிறார் சந்திரபாபு நாயுடு. 2004-ம் ஆண்டு தாக்குதலில் அவர் உயிர் தப்பித்திருக்கலாம். ஆனால் சந்திரபாபுவும் அவரது மகனும் இனி எங்களது இலக்கில் இருந்து தப்பவே முடியாது; தற்கொலைப்படை மூலமாவது தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.