மராத்தி நடிகையை பலாத்காரம் செய்த இயக்குனரின் நண்பர் உள்ளிட்ட 5 பேர்
மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தி நடிகை ஒருவர் 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் மராத்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் கடந்த 2 மாதங்களாக அவ்ரங்காபாத் மாவட்டத்தில் நடந்த லஹான்பான் மராத்தி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தனது சம்பளத்தை வாங்க அவ்ரங்காபாத் சென்றுள்ளார்.
அவர் சம்பளம் தொடர்பாக இயக்குனரின் நண்பரை அணுகியுள்ளார். அந்த நபர் நடிகையை பைத்தானுக்கு அழைத்துச் சென்று அங்கு 4 பேருடன் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து நடிகை போலீசில் புகார் அளித்தார்.
அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
உள்ளூர் இயக்குனர் ஆனந்த் மகாதே தனது படத்தில் நடிக்க ஒரு பெண் வேண்டும் என்று அவரது நண்பர் கோவிந்த் சிட்லாங்கேவிடம் தெரிவித்தார். கோவிந்த் என்னை அணுகி படத்தில் நடிக்க வைத்தார். நான் 2 மாதமாக நடித்தும் சம்பளம் அளிக்கவில்லை. சம்பளத்தை கேட்டதற்கு கோவிந்த் என்னை அவ்ரங்காபாத் வருமாறு கூறினார். நான் அங்கு சென்றபோது அவர் என்னை பைத்தானில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவிந்தை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.