பிரதமர் மோடியை சந்தித்தார் தங்கமகன் மாரியப்பன்
டெல்லி: ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் டெல்லியில் இன்று மாலை பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தியா சார்பில் 19 வீரர்கள் கலந்து கொண்டு 4 பதக்கம் பெற்றனர். 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆக மொத்தம் 4 பதக்கம் பெற்று இந்தியா பதக்கப் பட்டியலில் 43வது இடத்தை பிடித்தது. தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிந்தார். அவர் 1.89 மீட்டர் தாண்டினார்.

இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் வருண்சிங் வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தேவேந்திரா தங்கமும், பெண்களுக்கான குண்டு எறிதலில் தீபா மாலிக் வெள்ளி பதக்கமும் பெற்றனர். பாரா ஒலிம்பிக் நிறைவு விழாவில் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி சென்றார்.
இந்த நிலையில் மாரியப்பன் உள்பட பதக்கம் வென்ற பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைவரும் இன்று காலை டெல்லி திரும்பினர். வீரர்கள் அனைவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து சந்தித்து வாழ்த்து பெற்றார் தமிழக வீரர் மாரியப்பன்.
தமிழக வீரரான மாரியப்பன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விரும்புவதாக கூறியிருந்தார். முதல்வர் ஜெயலலிதா நேரம் ஒதுக்கி மாரியப்பனை சந்திக்க வேண்டும் என்றும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சிந்துவிற்கு ஆந்திரா மாநிலத்தில் வரவேற்பும் பாராட்டும் அளிக்கப்பட்டது போல தமிழகத்தில் மாரியப்பனுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications