திருமணமான பெண்ணை கடத்தி ரூ 1.5 லட்சத்திற்கு விற்பனை.. கணவனுடன் சண்டை போட்டதால் வந்த விபரீதம்
புவனேஸ்வரம்: ஒடிஸாவை சேர்ந்த பெண் கடத்தப்பட்டு ரூ 1.5 லட்சத்திற்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பல்பூர் பகுதியின் ஜார்சுகுடா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமார் (23). இவர் அதே பகுதியில் சகி படாவை சேர்ந்த இக்மத் அலிகானின் மகள் முஸ்கானை திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் ஜார்சுகுடா பகுதியில் புருணபாஸ்டி நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.

முஸ்கான்
இதனால் முஸ்கான் கடந்த சில தினங்களாக புலியாடிகிரா எனும் பகுதியில் கிரண் சேத்தி என்பவருடைய வீட்டில் வசித்து வருகிறார். தனது மனைவி கிரண் சேத்தி வீட்டில் வசித்து வருவதை அறிந்த கிருஷ்ணகுமார் அவரது வீட்டிற்கு மனைவியை காண்பதற்காக சென்றிருந்தார்.

அதிர்ச்சி
அப்போது அங்கு முஸ்கான் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முஸ்கான் தனது நண்பர் அஷ்ரப்பிடம் கிரண் சேத்தி, ரிஷிகேஷ் சேத்தி, டேனீஷ் பஹேரா ஆகியோர் தன்னை ராஜஸ்தானில் ஒரு நபருக்கு 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்றதை கூறினார். இது கிருஷ்ணாவுக்கு தெரியவந்தது.

நிர்பந்தம்
அந்த ராஜஸ்தான் நபர் , அவருடைய மகனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு தன்னை நிர்பந்தப்படுத்துகிறார் என்றும் , இதற்கு மறுத்தால் தன்னை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார் என்றும் தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணகுமார் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

5 பேர் கைது
புகாரின் பேரில் போலீஸார் முஸ்கானை மத்திய பிரதேச மாநிலம் நீமூச் பகுதியில் ராம்புரா கிராமத்திலிருந்து மீட்டனர். இது தொடர்பாக மனோஜ் பிரஜாபதி (28) கைது செய்யப்பட்டார். இவர் முஸ்கானையும் சுப்ரியாவையும் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இருவரையும் ஜார்சுகுடாவிலிருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications