டெல்லி அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 3 பேர் பலி-10 பேர் காயம்
டெல்லி: ஷதாரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லி ஷதாரா பகுதியில் உள்ள மோகன் பார்க்கில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இங்கு, அப்பகுதியில் இயங்கும் மின்சார ரிக்ஷாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இங்குள்ள குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையிக்கு ,இன்று காலை 5 மணியளவில் தகவல் வந்தது. இதையடுத்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு ஊர்திகளில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரிக்ஷாக்களில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications