மதுரா கலவரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
பாட்னா: மதுரா கலவரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஜவஹர் பாக் பகுதியில் உள்ள பூங்காவை ஸ்வாதீன் பாரத் சுபாஷ் சேனா என்ற அமைப்பை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தர்ணா நடத்துவதாக பொய் கூறி ஆக்கிரமித்தனர். 260 ஏக்கர் நிலப்பரப்பிலான இந்த பூங்காவை ஆக்கிரமிப்பாளர்கள் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமித்து தங்கியுள்ளனர்.

இதனிடையே நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற மாவட்ட அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் களம் இறங்கினர். போலீஸார் பூங்காவில் தங்கியிருந்தவர்களை வெளியேறுமாறு கூறியபோது, ஆக்கிரமிப்பாளர்கள் திடீரென போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனால் போலீசாருக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது. மோதலை கண்டுக்குள் கொண்டுவர போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 24 பேர் கொல்லப்பட்டனர். போலீஸ் தரப்பில் எஸ்.பி. உள்பட 2 பேர் பலியானார்கள்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முழு உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. மதுராவில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மதுரா கலவரம் குறித்து கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மதுரா கலவரம் குறித்து சிபிஐ விசாரணை அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மாநிலத்தை ஆட்சி செய்யும் உத்தர பிரதேச அரசு, மதுரா விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் மாநில முதல் அமைச்சர் பண்டல்க்ண்ட் செல்வதாகவும் மதுராவிற்கு செல்லவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications