டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்மச் சாவு
டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் அங்குள்ள விடுதி கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
டெல்லி: டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவமனையில் திருப்பூரை சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர் அங்குள்ள விடுதி கழிவறையில் சடலமாக காணப்பட்டார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. சாய ஆலை நடத்தி வருகிறார். இவரது மகன் சரத்பிரபு. கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த இவர், டெல்லி யூசிஎம்எஸ் (University College of Medical Sciences (UCMS)) மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி எம்.எஸ். படித்து வந்தார்.
விடுதியில் தங்கி படித்து வந்த அவர் நேற்று இரவு கழிவறையில் காயத்துடன் இருந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் அவரது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து செல்வமணி, தனது நண்பருடன் கோவையிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலமாக புறப்பட்டார். அவர் இன்சுலினை தனக்கு தானே செலுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது தந்தை செல்வமணி கூறுகையில், நேற்று இரவு எனது மகன் காயங்களுடன் கிடப்பதாகத்தான் கூறினார்கள். இதனால் பதறிய நான் எனது மகனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு என்னுடன் போனில் பேசியவரிடம் கூறினேன். ஆனால் இன்று காலை எனது மகன் இறந்துவிட்டார் என்கிறார்கள் என்றார் செல்வமணி.
இது போல் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களில் படிக்க செல்லும் மாணவர்கள் மர்மமான முறையிலும் தற்கொலை செய்து கொண்டும் இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.