தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாரான மோடி.. "நடத்த கூடாது".. அனுமதி மறுத்த மேகாலயா அரசு.. என்னாச்சு?
இந்த முறை மேகாலயாவில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இருக்கிறது. பாஜக மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் மேகாலயாவில் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.
ஷில்லாங்: தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாரான பிரதமர் நரேந்திர மோடிக்கு மேகாலயா அரசு அனுமதி தர மறுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட அரங்கத்தில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருவதாக கூறி மோடியின் பிரச்சாரத்துக்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.
மேகாலயா அரசின் இந்த நடவடிக்கைக்கு பிரதான எதிர்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாஜகவின் மக்கள் செல்வாக்கை பார்த்து பயந்தே, மோடியின் பிரச்சாரத்துக்கு மேகாலயா அரசு தடைவிதித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

தேர்தல் திருவிழா
இந்தியாவில் நடப்பாண்டின் தொடக்கமே தேர்தல் திருவிழாக்களோடு ஆரம்பித்துள்ளது. கர்நாடகா, சத்தீஸ்கர், மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து உட்பட 9 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் இந்த ஆண்டு நடக்கவுள்ளன. இதில் திரிபுரா தேர்தல் கடந்த 16-ம் தேதியே முடிவடைந்துவிட்டது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கான தேர்தல்கள் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-இல் நடைபெறவுள்ளது.

தனித்து களம் காணும் பாஜக
இந்நிலையில், 60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி), திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாஜக தனித்து களம் காண்கிறது. காங்கிரஸ் சில சிறிய கட்சிகளுடன் கைகோர்த்துள்ளது. இதனால் மேகாலயாவில் மும்முனை போட்டி காணப்படுகிறது.

"மோடி பவர்"
இதனிடையே, இந்த முறை மேகாலயாவில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இருக்கிறது. பாஜக மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் மேகாலயாவில் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 'மோடி பவர்' என்ற முழக்கத்துடன் அங்கு பாஜக முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மோடி பிரச்சாரத்துக்கு 'நோ'
இந்த சூழலில், வரும் 24-ம் தேதியன்று மேகாலயாவில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டிருந்தார். அதன் ஒருபகுதியாக, முதல்வர் சங்மாவின் சொந்த தொகுதியான செளத் துரா பகுதியிலும் மோடி பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தது. இந்நிலையில், மோடியின் பிரச்சாரத்துக்கு மேகாலயா அரசின் விளையாட்டுத் துறை திடீரென அனுமதி மறுத்துள்ளது. மோடி பிரச்சாரம் மேற்கொள்ள பி.ஏ. சங்மா விளையாட்டரங்கில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் இந்த பிரச்சாரத்துக்கு அனுமதி தர முடியாது என மேகாலயா விளையாட்டுத் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications