கணவர் பாக்கெட்டில் இருந்தே பணம் எடுத்து கூலிப்படையினருக்கு கொடுத்த சோனம்.. ஹனிமூன் கொலையில் ஷாக்!
சில்லாங்: கணவனை ஹனிமூன் சென்ற இடத்தில் கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்ஷி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனம் (25) என்ற பெண்ணுக்கும் கடந்த மே 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23 ஆம் தேதி ராஜாவையும் சோனத்தையும் காணவில்லை. கடந்த ஜூன் 2 ஆம் தேதி மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாவ்டாங் அருவி அருகே உள்ள பள்ளத்தக்கில் ராஜா ரகுவன்ஷியின் உடல் மீட்கப்பட்டது.

மேகாலயா போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜா ரகுவன்ஷி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி சோனம், அவரது காதலர் ராஜ் குஷ்வாகா (21) மற்றும் ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சோனத்தின் தந்தை தேவி சிங், இந்தூரில் பிளைவுட் கடை நடத்தி வருகிறார். அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் மகன் விபின், மகள் சோனம் கடையை கவனித்து வந்தனர். இந்த கடையில் ராஜ் குஷ்வாகா கணக்காளராக பணியாற்றி வந்தார். அப்போது சோனத்துக்கும் ராஜ் குஷ்வாகாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்தனர்.
வேறு சாதி என்பதாலும், பொருளாதார அடிப்படையில் கொஞ்சம் பின்தங்கியவர் என்பதாலும் ராஜ் குஷ்வாகாவை தனது குடும்பத்தினர் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது சோனத்துக்கு தெரிந்துள்ளது. ஓரளவுக்கு மேல் பிடிவாதம் பிடிக்காமல் குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணத்துக்கு அவர் சம்மதம் தெரிவித்தார். கடந்த மே 11-ம் தேதி ராஜா ரகுவன்ஷி, சோனம் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்தபின் கணவரை கொலை செய்துவிட்டு காதலர் ராஜ் குஷ்வாகாவுடன் நேபாளத்துக்கு தப்பிச் செல்ல சோனம் சதித் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக தேனிலவுக்கு செல்ல வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அதன்படியே, மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்ற நிலையில் அங்கு கணவனை கொலை செய்துள்ளார் சோனம்.
ராஜ் குஷ்வாகாவிடம் பேசி, தனது கணவரை தேனிலவு செல்லும் இடத்தில் வைத்து கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்ய கூறினார். முதலில் கூலிப்படைக்கு ரூ.14 லட்சம் பேசி உள்ளனர். அட்வான்ஸாக சில லட்சங்களை கொடுத்துள்ளார் சோனம். கொலை நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன், கூலிப்படையினர் தயங்கவே, அவர்களுக்கு ரூ.20 லட்சம் தருவதாக கூறி, கொலையை அரங்கேற்றி உள்ளார்.
சிரபுஞ்சி அருவிப்பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாத பகுதிக்கு கணவரை அழைத்து சென்றுள்ளார் சோனம். அங்கு அவர்களை பின்தொடர்ந்து வந்த கூலிப்படையைச் சேர்ந்த விஷால் உள்ளிட்டோர், கோடரியால் ராஜா ரகுவன்ஷியை வெட்டினர். அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததும், அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.15 ஆயிரத்தை எடுத்த சோனம், அதை கூலிப்படைக்கு கொடுத்தார். பின்னர் அவர் அணிந்திருந்த நகைகளையும் கூலிப்படையினர் எடுத்துக் கொண்டுள்ளனர்.
தனது காதலன் ராஜ் குஷ்வாகா மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதிலும் மிகவும் கவனமாக இருந்துள்ளார் சோனம். கொலை நடக்கும் இடத்துக்கு அவர் வரவேண்டாம் என்று கூறியுள்ளார். கூலிப்படையினரை மட்டும் அவர் புறப்பட்ட அன்றே ரயிலில், சோஹ்ராவுக்கு வரவழைத்துள்ளார். கூலிப்படையினராக விஷால், ஆகாஷ், ஆனந்த் ஆகியோர் சிரபுஞ்சியில் வைத்து சுற்றுலா பயணிகள் போல் ராஜா ரகுவன்ஷிக்கு அறிமுகம் ஆகியுள்ளனர்.
சோஹ்ராவில் ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதி தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகம், அவர்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டியை ஏற்பாடு செய்து கொடுத்தது. தினமும் அவர் அவர்களுடன் சென்று வந்தார். ஆனால் கொலை நடந்த நாளன்று அவரை சோனம் திட்டமிட்டு தவிர்த்துள்ளார்.
மேலும் ஹனிமூன் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்த அவர், திரும்பி வருவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. தான் அங்கிருந்தபடியே தனியாக, ராஜ் குஷ்வாகாவை வரவழைத்து, வீட்டுக்கு செல்லாமல் வேறு எங்காவது செல்ல திட்டமிட்டு இருந்துள்ளார். போலீஸ் விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகியுள்ளன.












Click it and Unblock the Notifications