மேகாலயா: பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு என அறிவிப்பதா? 2 எம்.எல்.ஏக்களுக்கு மாநில அமைப்புகள் வார்னிங்!
மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த 2 எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஷில்லாங்: மேகாலயாவில் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவதாக அறிவித்த ஹெச்எஸ்பிடிபி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என மாநில அமைப்புகள் கெடு விதித்துள்ளதாக் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மேகாலயாவில் ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. 2 இடங்களில் வென்ற பாஜக, 2 சுயேட்சைகள் என்பிபி மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும் பெரும்பான்மைக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில் 11 இடங்களில் வென்ற ஹெச்எஸ்பிடிபியின் 2 எம்.எல்.ஏக்கள் திடீரென என்பிபி கட்சி அமைக்க ஆதரவு தருவதாக அறிவித்தனர். அத்துடன் முதல்வர் கான்ராட் சங்மாவுக்கு ஆதரவு கடிதமும் கொடுத்தனர். இதனடிப்படையில் மேகாலயா மாநில முதல்வராக கான்ராட் சங்மா மீண்டும் பதவியில் தொடர உள்ளார்.
இந்த நிலையில் என்பிபி, பாஜக, சுயேட்சைகள் அல்லாத எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து புதிய கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனாலும் இந்த கூட்டணி ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லை.
இதனிடையே புதிய திருப்பமாக ஹெச்எஸ்பிடிபி எம்.எல்.ஏக்கள் 2 பேர் என்பிபி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்ததற்கு கட்சித் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்சி தலைமையின் ஒப்புதல் பெறாமல் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் கொடுத்துவிட்டனர் எனவும் அறிவித்துள்ளது. இதனால் மேகாலயா மாநிலத்தில் புதிய ஆட்சி அமையும் முன்னரே குழப்பம் உருவாகிவிட்டது.
மேலும் ஹெச்எஸ்பிடிபி கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள், மாநில கட்சிகள் இணைந்து புதிய ஆட்சி அமைக்க உதவாமல் பாஜகவை இணைத்து கொண்டு ஆட்சி அமைக்க உதவுவதா? என மாநில அமைப்புகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் அடுத்த 2 நாட்களுக்குள் 2 எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவு கடிதத்தை வாபஸ் பெறாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் எனவும் அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன. அத்துடன் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த 2 எம்.எல்.ஏக்களின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டுள்ளன. தங்களது எதிர்ப்பையும் மீறி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க அந்த 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுத்தால் அவர்கள் ராஜ்பவனில் பதவியேற்க முடியாத நிலைமையை உருவாக்குவோம் எனவும் எச்சரித்துள்ளனர். இதனால் மேகாலயாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications