மாதவிடாய் என்று சொல்லியும்.. பெண்ணை குளிக்க விடாத "நம்பிக்கை".. இன்னுமா இக்கொடுமை? மலைத்த நீதிமன்றம்
போபால்: மாதவிடாய் என்று சொல்லியும், அந்த பழங்கால மாமியார் எதையுமே காதில் வாங்கி கொள்ளவில்லையாம். இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த புதுமணப்பெண், நீதிமன்ற வாசலை மிதித்துள்ளார். தற்போது அவருக்கு உரிய நீதி கிடைத்துள்ளது. என்ன நடந்தது?
சமீப காலமாகவே குடும்ப நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள், பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகின்றன.. இதில், ஏராளமான விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களுக்கு சென்றிருந்த நிலையில், அவைகளில் சில விவாகரத்து வழக்குகள் இணையத்திலும் வைரலாகியிருந்தன... பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றமும் துணை நின்று, அதற்கேற்ற உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.

நேற்றைய தினமும், மத்தியப் பிரதேசத்தில், குடும்ப வழக்கு ஒன்றில், நீதிமன்றத்தை நாடி, தனக்குரிய விவாகரத்தை பெற்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.. என்ன நடந்தது மத்திய பிரதேச மாநிலத்தில்?
புதுமண ஜோடி: மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்தவர் அந்த பாதிரியார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகியிருக்கிறது.. இதையடுத்து, புது மனைவி மற்றும் தன்னுடன் அப்பா, அம்மாவுடன் இந்த பாதிரியார் வசித்து வந்துள்ளார்..
ஆனால், பாதிரியாரின் அம்மா, மூடநம்பிக்கைகளுக்கு அடிமையானவராம்.. அந்தக்கால பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகளை எப்போதும் கடைப்பிடித்து வருபவராம். அந்த பழக்கவழக்கத்தில் அவர் மூழ்கியிருப்பதுடன், திருமணமாகி வீட்டுக்கு வந்த புதுமணப்பெண்ணிடமும் அந்த பழக்கத்தை திணித்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த பெண், கோர்ட்டுக்கே போய் விட்டார்.
பழமைவாத நம்பிக்கை: மிகவும் பழமைவாத நம்பிக்கைகளை கொண்ட உங்கள் குடும்பத்துடன் வாழ்வது சாத்தியமில்லை என்று கணவரிடம் சொன்னதுடன், அந்த கணவரின் பரஸ்பர சம்மதத்தை பெற்று, விவாகரத்து கோரி போபால் மாவட்ட குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13(B)ன் கீழ் பரஸ்பர ஒப்புதலுடன், விவாகரத்து கோரி மனுவை தாக்கல் செய்துள்ளார் அந்த பெண்.. அதில், மாமியார் தனக்கு இழைத்த டார்ச்சர்களை ஒன்றுவிடாமல் குறிப்பிட்டுள்ளார்.
மாதவிடாய்: அதாவது, மாதவிடாய் நேரங்களில், 7 நாட்களுக்கு கிச்சனுக்கும், சாமி அறைக்கும் நுழைய கூடாது, வீட்டை விட்டு வெளியே எங்குமே செல்லக்கூடாது, தன்னை ஒரு ரூமிலேயே அடைத்து வைத்துள்ளார். மேலும் மாதவிடாய் நேரங்களில், அந்த ஒரு வாரத்திற்கும் குளிக்கக் கூடாது என்று கண்டிஷன் போடுகிறார். இதையெல்லாம் கணவரிடம் சொன்னாலும், அவர் தலையிட மறுத்து, தன்னுடைய அம்மா சொல்லும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நான் வெளியே செல்லும்போதெல்லாம் தெரு நாய்கள் என்னைப் பார்த்து குரைத்து துரத்துகின்றன. என்னிடம் தீய சக்திகள் இருப்பதால்தான், நாய்கள் என்னை துரத்துவதாக என்னுடைய மாமியார் சொல்கிறார். இந்த துன்புறுத்தல்கள் பொறுக்க முடியாமல, திருமணமான 4 மாதங்களிலேயே தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டேன்" என்றெல்லாம் அந்த பெண் மனுவில் கூறியிருந்தார்.
அதிரடி உத்தரவு: இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுபோன்ற காலாவதியான நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் இன்னுமா இந்த உலகில் இருக்கிறார்கள்? இதுமிகவும் கசப்பான உண்மை என்று கடுமையாக சாடியதுடன், தம்பதி இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications