கன்னட அமைப்பினர் வன்முறை எதிரொலி.. பெங்களூரில் 'மெர்சல்' ஓடும் தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'மெர்சல்' திரைப்படம் வெளியிடப்பட்ட தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில், விஜய், நித்யாமேனன், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மெர்சல். தமிழகத்தை போலவே பெங்களூர், மைசூர் உள்ளிட்ட கர்நாடக திரையரங்குகளிலும் படம் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது.
இந்த நிலையில், பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியிலுள்ள ஒரு தியேட்டரின் வெளியே கன்னட மொழி பேசிய ஒருவர் விஜய் ரசிகர்களால் தாக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவியது.

வன்முறை வெடித்தது
இதையடுத்து, கன்னட அமைப்பினர் ஒன்று திரண்டு வந்து, போராட்டம் நடத்தினர். விஜய் கட்-அவுட்டுகளை அடித்து நொறுக்கினர். கன்னட திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்து தலைமையில், சம்பிகே தியேட்டர் எதிரே போராட்டம் நடைபெற்றது. இவர், ராஜ்குமார் ரசிகர் மன்ற தலைவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர், மைசூரில் பாதுகாப்பு
மைசூரிலும் கன்னட அமைப்பினர் மெர்சல் படத்தை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவங்கள் குறித்து அறிந்ததும், சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் பெங்களூர் நகரில் மெர்சல் திரையிடப்பட்ட பொம்மனஹள்ளி ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட பல தியேட்டர்களிலும் போலீசார் முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்டனர்.

தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு
இதனிடையே கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, இன்றும் பல்வேறு தியேட்டர்களில் போலீசார் குவிக்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்புடன் திரைப்படம் திரையிடப்படுகிறது.

பெங்களூரில் தமிழ் படங்கள் கலக்கல்
கன்னட திரைப்படங்கள், தமிழின் முன்னணி நடிகர்கள் படங்கள் பெறும் ஓப்பனிங்கில் பாதியை கூட தலைநகர் பெங்களூரிலேயே கூட பெறுவதில்லை. கன்னட ரசிகர்கள் கூட, விஜய், அஜித், ரஜினி, கமல் படங்களை தியேட்டர்களில் வந்து பார்க்கிறார்கள். இதனால், கன்னட ஆர்வலர்கள் என கூறிக்கொள்வோர் கோபத்தில் உள்ளனர். விஜய் நடித்த மெர்சலுக்கு பெங்களூரில் அமோக ஓப்பனிங் கிடைத்துள்ளதுதான், கர்நாடக திரைப்பட வர்த்தகசபை தலைவர் சா.ரா.கோவிந்து போன்றவர்களே போராட்டத்தில் குதிக்க காரணமாக அமைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழர் கலாசாரம்
'ஆளப்போறான் தமிழன்' போன்ற பாடல் வரிகள் மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ளதாலும், வேட்டி போன்ற தமிழர் கலாசாரத்தை படத்தில் தூக்கிப்பிடிப்பதாலும், இன்னும் அதிக கோபத்தில் கன்னட அமைப்பினர் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தியேட்டர்களில் தொடர்ந்து தொல்லைகள் வரலாம் என உளவுத்துறை, கர்நாடக முதல்வருக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாம்.












Click it and Unblock the Notifications