காஷ்மீரில் ராணுவ நிலையை தாக்கிய 3 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்கள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள தங்தார் செக்டரில் இருக்கும் ராணுவ நிலை மீது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளையும் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே உள்ள தங்தார் செக்டரில் இருக்கும் ராணுவ நிலை மீது இன்று காலை 7.40 மணி அளவில் மூன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டதுடன், கையெறி குண்டுகளையும் வீசினர்.
இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும், உள்ளூர்காரர் ஒருவரும் பலியாகினர். சிறிது நேரத்தில் தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கியால் ராணுவ நிலையை நோக்கி சுட்டனர்.
பதிலுக்கு ராணுவத்தினரும் துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 7 மணி போராட்டத்திற்கு பிறகு ராணுவ வீரர்கள் அந்த 3 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். தங்தார் ராணுவ நிலையில் 80 வீரர்கள் உள்ளனர்.
முன்னதாக கடநத் வாரம் தீவிரவாதிகளை எதிர்த்து போராடியபோது ராணுவ வீரர் சந்தோஷ் மஹதிக்(38) வீர மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.