காதலனால் ஏற்பட்ட கருவைக் கலைக்க அனுமதி தேவை – 16 வயது சிறுமி நீதிமன்றத்தில் மனு!
சண்டிகர்: ஹரியானாவில் காதலனால் ஏமாற்றப்பட்டு உருவான கருவைக் கலைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று 16 வயது சிறுமி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மாவட்டத்தை சேர்ந்த தங்களின் 16 வயது மகளை காணவில்லை என அவளது பெற்றோர் கடந்த ஏப்ரல் மாதம் போலீசில் புகார் அளித்தனர்.
அந்தப் பெண்ணை தேடிவந்த போலீசார், கடந்த ஜூலை மாதம் அவளை கண்டுபிடித்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சிறுமியிடம் பாலியல் வன்முறை:
திருமண ஆசை காட்டி அந்த சிறுமியை வீட்டை விட்டு அழைத்துச் சென்று, மறைவான இடத்தில் தங்கவைத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார் சுர்ஜித் குமார் என்ற வாலிபர்.
போலீசார் வழக்கு:
இந்த வழக்கில் சுர்ஜித் குமார் உள்பட 7 பேர் மீது அம்பாலா மாவட்டத்தின் பிம்லேஷ் தன்வரில் உள்ள விரைவு நீதி மன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கருவைக் கலைக்க அனுமதி:
இந்நிலையில், சுர்ஜித்துடன் சென்று தனியாக வாழ்ந்தபோது தனக்கு உண்டான கருவைக் கலைக்க சட்டபூர்வமாக அனுமதி அளிக்குமாறு இந்த வழக்கை விசாரித்துவரும் இதே நீதி மன்றத்தில் அந்த சிறுமி மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு விசாரணை:
அந்த சிறுமியின் சார்பில் அவளது பெற்றோர் தாக்கல் செய்துள்ள மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
சுர்ஜித் குமார் எதிர்ப்பு:
இன்று மீண்டும் விசாரணை தொடரவுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றார் முக்கிய குற்றவாளியான சுர்ஜித் குமார்.
சட்டப்படி திருமணம்:
தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் சட்டப்படி திருமணம் நடந்துள்ளதால், இந்த கருக்கலைப்புக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கக் கூடாது என்று மாவட்ட நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.