டிவி நிகழ்ச்சி நடத்த வாங்கிய ரூ.1.19 கோடியை சாரதா குழுமத்திடம் திருப்பிக் கொடுத்த நடிகர் மிதுன்
மும்பை: நிதிமோசடியில் ஈடுபட்டு சிக்கிய சாரதா குழுமத்திற்கு சொந்தமான டிவி சேனலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த வாங்கிய ரூ.1.19 கோடி பணத்தை பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரபர்த்தி திருப்பிக் கொடுத்துள்ளார்.
நிதிமோசடி செய்து சிக்கிய சாரதா குழுமத்திற்கு சொந்தமான சேனல் 10ல் அரசியல் விவாத நிகழ்ச்சி நடத்த பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரபர்த்தி ஒப்பந்தம் ஆனார். அந்த நிகழ்ச்சியை நடத்த அவருக்கு சாரதா குழுமம் ரூ.1.19 கோடி அளித்தது.
இந்நிலையில் சாரதா நிதிநிறுவன மோசடி குறித்து அமலாக்க இயக்குனரகம் மிதுன் சக்ரபர்த்தியிடம் விசாரணை நடத்தியது. இதையடுத்து அவர் சேனல் 10 தொலைக்காட்சியில் அரசியல் விவாத நிகழ்ச்சியை நடத்த ஒப்பந்தம் ஆனது, சம்பளமாக பெற்ற தொகை குறித்து எழுத்துப்பூர்வமாக அமலாக்க இயக்குனரகத்திடம் அளித்தார். தனக்கும் சாரதா நிதிநிறுவன மோசடிக்கும் எந்தவகை தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
அதன் பிறகு சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் இருந்து மிதுன் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் டிவி நிகழ்ச்சியை நடத்த வாங்கிய ரூ.1.19 கோடியை சாரதா குழுமத்திடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.