போலீஸ் டிஎஸ்பி தற்கொலை வழக்கில் திருப்பம்.. கர்நாடக அமைச்சர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
பெங்களூர்: கர்நாடக காவல்துறை அதிகாரி மரணம் தொடர்பான வழக்கில், அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
கர்நாடக காவல்துறை துணை எஸ்.பி.யாக பணியாற்றிய எம்.கே.கணபதி, கடந்த ஆண்டு, ஜூலை 7ம் தேதி மடிகேரி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

ஆனால், கணபதி சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை மற்றும் சகோதரர் குற்றம்சாட்டினர். ஜார்ஜ் மற்றும், முன்னாள் லோக்ஆயுக்தா ஐஜிபி பிரனாவ் மொகந்தி மற்றும் ஏடிஜிபி ஏ.எம்.பிரசாத் ஆகியோர் தனது மகனுக்கு தொல்லை கொடுத்ததாக கணபதி தந்தை குற்றம்சாட்டினார். கணபதி இதுபற்றி டிவி சேனலுக்கு அளித்த பேட்டியை அவர்கள் சுட்டிக் காட்டினர். எனவே இதுபற்றி சிஐடி விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
சிஐடி தனது விசாரணையில் ஜார்ஜ் உள்ளிட்ட மூவருமே நிரபராதிகள் என கூறி வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து கணபதி தந்தை மற்றும் சகோதரர் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டினர்.
அவர்கள் கோரிக்கையை ஏற்று, கணபதி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. மூன்று மாதத்திற்குள் சிபிஐ விசாரணையை முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சிபிஐ இன்று தனது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அமைச்சர் ஜார்ஜ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். பிரனாவ் மொகந்தி மற்றும் எம்.ஏ.பிரசாத் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், அடுத்த ஆண்டு மே மாதவாக்கில் தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடகாவில், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பிரசார அஸ்திரம் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்துள்ளது. ஜார்ஜ் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக, மதசார்பற்ற ஜனதாதள கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications