ஒரு கூட்டுக் கிளியாக.. யோகி கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. முதல் வரிசையில் மு.க.ஸ்டாலின்! கையை விடலையே!
டெல்லி: பாஜக திமுக இடையே மோதல் முற்றியிருக்கும் நிலையில் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின்பு பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் உற்சாகமாக உரையாடினர். தொடர்ந்து முதலமைச்சர்களுடன் பிரதமர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில் யோகி ஆதித்யநாத்தையே ஓரம் கட்டி விட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அருகில் நிற்கவைக்கப்பட்டார் ஸ்டாலின். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய அளவில் பாஜகவை வெகு தீவிரமாக எதிர்க்கும் கட்சி என்றால் அது திமுக தான். மாநில கட்சியாக இருந்தாலும், தொகுதி மறுவரையறை, தேசிய கல்விக் கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பல மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின்.
தமிழகத்திலும் பாஜக காலூன்றி விடவே கூடாது என மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் பாஜக அதிமுக கூட்டணியையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவுக்கு பயந்து அடிமை போல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே அமலாக்க துறையின் பார்வை தமிழகத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மது விற்பனையில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சோதனை நடத்தியது. முதல் முறை டாஸ்மாக் மற்றும் மதுபான தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இரண்டாவது முறை முக்கிய புள்ளிகளை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக டாஸ்மாக் மேலான் இயக்குனர் விசாகன், தொழிலதிபர் ரத்தீஷ், திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரை குறி வைத்து சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனையில் பல முக்கிய ஆதாரங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. விசாகன் அப்ரூவராக மாறிவிட்டார் என கூறப்படும் நிலையில், ரத்தீஷும் ஆகாஷ் பாஸ்கரனும் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. கடந்த மூன்று முறை அந்த கூட்டத்தை புறக்கணித்த நிலையில் நான்காவது கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்வது ஏன் என அதிமுக கேள்வி எழுப்பியது.
மேலும் அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து வெள்ளைக்கொடி காட்ட ஸ்டாலின் டெல்லிக்கு செல்கிறார் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். அதே நேரத்தில் மோடிக்கும் பயம் இல்லை, ஈடி-க்கும் பயமில்லை என உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக பஞ்சாப் முதலமைச்சர் பகவான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டம் நிறைவடைந்த உடன் தேநீர் அருந்தியபடி பிரதமர் நரேந்திர மோடி, மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் உரையாடினார். தொடர்ந்து பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் தனியே சந்தித்து பேசினார். தொடர்ந்து குழு புகைப்படம் எடுக்கப்பட்டது.
அதில் முதல் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி நிர்மலா சீதாராமனுக்கு வலது புறத்தில் மு.க.ஸ்டாலினை நிற்க வைத்து புகைப்படம் எடுக்கப்பட்டது. அவருக்கு அருகில் தான் உத்தரபிரதேச முதலமைச்சரும் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவருமான யோகி ஆதித்யநாத் இருந்தார். மேலும் பாஜக ஆட்சி தொடர காரணமான சந்திரபாபு நாயுடு கூட உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதின் கட்கரி ஆகியோருக்கு அருகில் நின்ற நிலையில் பாஜகவை மிக தீவிரமாக எதிர்த்து வரும் மு,க.ஸ்டாலின் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமனுக்கு அருகே நிற்கவைக்கப்பட்டார். தற்போது இந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications