காங். தோல்விக்கு சாட்சியாக இருப்பது 100 நாள் வேலைத் திட்டம்: பிரதமர் மோடி
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு சாட்சியாக இருப்பது 100 நாள் வேலைத் திட்டம்தான்.. இத்திட்டத்தை நிச்சயம் நாங்கள் கைவிடமாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசியதாவது:
முந்தைய ஆட்சிக் கால திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த பெயர் மாற்றம் குறித்து சிலர் விவாதிக்கின்றனர். இதை நீங்கள் விமர்சிக்க வேண்டாம். பெயரில் பிரச்சனை அல்ல.. அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியம்.

தூய்மை திட்டம் என்பது மிகவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். தற்போது வாரணாசியில் ஆசி காட் பகுதி தூய்மைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது எவ்வளவு அசுத்தமாக இருந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அரசுகள் என்பது வரும் போகும். இந்த நாடு மக்களால் கட்டமைக்கப்பட்டது. நாங்கள் 9 மாதத்தில் அனைத்தையும் சாதித்துவிட்டோம் என்று கூறவில்லை.
முந்தைய காங்கிரஸ் அரசின் தோல்விக்கு சாட்சியாக இருப்பது 100 நாள் வேலைத் திட்டம். இதை நிச்சயம் நாங்கள் கைவிடப் போவது இல்லை.
இந்த நாட்டை ஊழல் சீரழித்துவிட்டது. ஒட்டுமொத்த நாடுமே இணைந்து ஊழலை ஒழிக்க வேண்டும்.
கருப்புப் பணத்தை மீட்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை நாங்கள்தான் அமைத்தோம். கருப்புப் பணத்தை விரைவாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications